சூப்பர் ஓவர்
அதே போல, ஐந்தாவது டி20 போட்டியும் டை ஆனது. பின்னர் சூப்பர் ஓவர் நடந்தது. இந்த முறை சூப்பர் ஓவர் டை ஆகவில்லை. இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மழையால் தடை
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 தொடரின் நான்கு போட்டிகள் முடிவில் இரண்டு அணிகளும் 2 - 2 என்ற சமநிலையில் இருந்தன. ஐந்தாவது மற்றும் தொடர் வெற்றியை நிர்ணயிக்கும் போட்டி மழையால் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டு துவங்கியது.
நியூசிலாந்து இன்னிங்க்ஸ்
11 ஓவர் போட்டி என்பதால் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அதிரடியாக ஆடத் துவங்கியது. துவக்க வீரர்கள் மார்டின் கப்தில், கோலின் மன்றோ மரண அடி அடித்தனர்.
மார்ட்டின் கப்தில் மரண அடி
வெறும் 20 பந்துகளில் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார் மார்டின் கப்தில். இவர் 5 சிக்ஸர்கள் அடித்து வெறியாட்டம் ஆடினார். மன்றோ 21 பந்தில் 46 ரன்கள் குவித்தார். இவர் 4 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். செய்பர்ட் 16 பந்தில் 39 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணி 11 ஓவர்களில் 146 ரன்கள் குவித்தது.
பேர்ஸ்டோ பதிலடி
இங்கிலாந்து அணி 147 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடியது. துவக்க வீரர் பான்டன் 7 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரர் பேர்ஸ்டோ 18 பந்தில் 47 ரன்கள் குவித்து மிரட்டினார்.
இங்கிலாந்து போராட்டம்
அதன் பின் இங்கிலாந்து வீரர்கள் வேகமாக ரன் குவித்தாலும் விக்கெட்களையும் விரைவாக இழந்தனர். மார்கன் 17, சாம் கர்ரன் 24 ரன்கள் எடுத்தனர். கடைசி 2 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது.
போட்டி டை
10வது ஓவரில் 10 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், முதல் இரண்டு பந்துகளில் 3 ரன்கள் எடுத்தது. மூன்றாவது பந்தில் டாம் கர்ரன் ஆட்டமிழந்தார். அடுத்த மூன்று பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார் ஜோர்டான். போட்டி டை ஆனது.
சூப்பர் ஓவரில் என்ன நடந்தது?
இதையடுத்து, சூப்பர் ஓவர் சென்றது போட்டி. ரசிகர்கள் மீண்டும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடக்கிறதா? என வியப்பின் உச்சத்துக்கே சென்றார்கள். சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்தது இங்கிலாந்து அணி. அந்த அணி 17 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து சொதப்பல்
நியூசிலாந்து அணிக்கு பேட்டிங் செய்ய செய்பர்ட், மார்டின் கப்தில் வந்தனர். கப்தில் ஸ்ட்ரைக் எடுத்துக் கொள்ளவில்லை. செய்பர்ட் முதல் பந்தை சந்தித்தார். அவர் பந்தை அடித்து ஆட முயற்சி செய்து நான்கு பந்துகளில் ஒரு ஃபோர், இரண்டு சிங்கிள் மட்டுமே எடுத்தார். பின் அவுட் ஆனார்.
இங்கிலாந்து வெற்றி
கடைசி இரண்டு பந்துகளில் நியூசிலாந்து 1 ரன் மட்டுமே எடுக்க, நியூசிலாந்து 8 ரன்கள் மட்டுமே எடுத்து சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி சேஸிங்கில் போராடினாலும், சூப்பர் ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது.
தோல்வி மேல் தோல்வி
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவரை கூட டை செய்த நியூசிலாந்து அணி, பவுண்டரி எண்ணிக்கையால் தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. அடுத்து ரக்பி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.
நொந்து போன நியூசிலாந்து
அதையடுத்து, தற்போது டி20 தொடரின் கடைசி போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்துள்ளது. அதனால், நியூசிலாந்து மக்கள் இங்கிலாந்து பெயரைக் கேட்டாலே நொந்து போகும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.