ஹராரே: பிரபல ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ப்ரெண்டன் டெய்லர் மனைவியிடம் மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான பிரெண்டன் டெய்லர், 188 ஒரு நாள் போட்டிகளிலும் 28 டெஸ்ட் தொடர்களிலும் விளையாடி இருக்கிறார். தலைநகர் ஹராரேவில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி சிலர் கொள்ளையடித்துச் சென்றதாக ட்விட்டரில் டெய்லர் பதிவிட்டு உள்ளார். அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது:வீட்டுக்கு வெளியே நான் எனது மனைவியின் வருகைக்காக காத்திருந்தேன்.
என் வீட்டின் வாசலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், திடீரென்று என் மனைவி அலறும் சத்தம் கேட்டது. என்னவென்று பீதியடைந்த நான் செல்வதற்குள், ஆயுதம் வைத்திருந்த 4 பேர் அவளிடம் கொள்ளையடித்து விட்டு சிகப்பு நிற காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.
நல்ல வேளையாக அவள் கைப்பை மட்டும் தான் திருடு போயிருந்தது. இது ஒரு எச்சரிக்கை. பொதுமக்கள் அனைவரும் விழிப்போடு இருங்கள். இருட்டில் வெளியே செல்லும் போது கவனமாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.