ஆஸி. தொடரில் தேர்வாகவில்லை
ரஞ்சி மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் 2020 தொடரின் இடையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடருக்காக இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த அணியில் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. இதேபோல சூர்யகுமார் யாதவின் பெயரும் இடம்பெறவில்லை.
மாற்று சிந்தனை
ஆஸ்திரேலிய அணிக்கான வீரர்களை தேர்வு செய்ய தேர்வாளர்கள் ஆலோசனை மேற்கொண்ட பொழுதிலிருந்தே தான் அதுகுறித்த சிந்தனையிலேயே இருந்ததாகவும், பின்பு மற்ற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி அதிலிருந்து வெளிவந்ததாகவும் சூர்யகுமார் கூறியுள்ளார்.
அதிர்ச்சி... ஏமாற்றம்
ஆனால் அணி வீரர்கள் குறித்த அறிவிப்பு வந்தவுடன் தன்னுடைய பெயர் விடுபட்டது குறித்து தனக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமும் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தன்னுடைய அறையில் அமர்ந்து தான் இதுகுறித்து சிந்தித்ததாகவும், ஐபிஎல்லில் நிலையான ஆட்டத்தை கொடுத்தவர்கள் அதில் இடம்பெற்றதை தான் உணர்ந்ததாகவும் சூர்யகுமார் கூறினார்.
தொடர்ந்து விளையாட அறிவுறுத்தல்
பின்பு ஜிம்மில் இருந்த ரோகித் சர்மாவிடம் தன்னுடைய ஏமாற்றம் குறித்து பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறினார். இதையடுத்து ஐபிஎல்லில் தான் சிறப்பாக விளையாடி வருவதை சுட்டிக் காட்டிய ரோகித், தேர்வு குறித்து சிந்திப்பதை விட்டுவிட்டு தொடர்ந்து சிறப்பாக விளையாட அறிவுறுத்தியதாக சூர்யகுமார் கூறினார்.
திறமை மீது நம்பிக்கை
நேரம் கைகூடினால், இன்றோ நாளையோ சூர்யாவிற்கான வாய்ப்பு கண்டிப்பாக வரும் என்று ரோகித் கூறியதாகவும் அதுவரை தன் திறமை மீது உள்ள நம்பிக்கையை கைவிடாமல் விளையாட அறிவுறுத்தியதாகவும் சூர்யகுமார் மேலும் கூறினார்.
அதிகரித்த தன்னம்பிக்கை
ரோகித்தின் இந்த வார்த்தைகள் ஏமாற்றத்திலிருந்து தான் வெளிவர உதவியதாகவும் சூர்யா கூறினார். ரோகித்தின் இந்த அறிவுரை தனக்கு மேலும் தன்னம்பிக்கையை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். தேர்வு குறித்து யோசிப்பதை விட்டுவிட்டு தான் தன்னுடைய போட்டிகளில் கவனம் செலுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார்.