மூன்று சீசன்கள்.... தொடர்ந்து 15 தோல்விகள்... மதுரைக்கு முதல் வெற்றி கிடைத்தது!
திருநெல்வேலி: டிஎன்பிஎல் வரலாற்றில் வெற்றியே பெறாத அணி என்ற நிலையில் இருந்த சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி, தொடர்ந்து 15 ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில், 16வது ஆட்டத்தில் முதல் வெற்றியை சுவைத்துள்ளது.
டிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசன் போட்டிகள் நடக்கின்றன. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியை 26 ரன்களில் வென்றது சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி. இது மதுரை அணிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும்.

கடந்த இரண்டு சீசன்களில் மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ் என்ற பெயரில் விளையாடிய மதுரை அணி இதுவரை ஒரு வெற்றியைக் கூட பெற்றதில்லை. தொடர்ந்து 15 ஆட்டங்களில் தோல்வியையே சந்தித்தது.
இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது மதுரை அணி. ஆனால், 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வென்றது.
நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது மதுரை. ஆனால் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதையடுத்து 26 ரன்களில் முதல் வெற்றியை சுவைத்தது மதுரை.


Click it and Unblock the Notifications