உலக கோப்பை நாயகன்
உலக கோப்பைக்கென இந்திய ரசிகர்கள் அனைவரும் கனவுகள் மற்றும் ஏக்கங்களுடன் காத்திருந்த வேளையில், அந்த சாதனையை இந்தியாவின் வசம் கொண்டுவந்த சரித்திர நாயகன் கபில் தேவ். சண்டிகரை சேர்ந்த கபில்தேவ், இந்திய அணியின் முன்னாள் கேப்டன், ஆல்ரவுண்டராகவும் செயல்பட்டு பல்வேறு சாதனைகளின் சொந்தக்காரராக உள்ளார் இந்த ஹரியானா புயல்.
பாகிஸ்தானுக்கு எதிராக களம்
வலதுகை பாஸ்ட் பௌலராகவும் வலதுகை பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்த இவர் டெஸ்ட் போட்டியில் கடந்த 1978ல் அக்டோபர் 16ல் பாகிஸ்தானுக்கு எதிராக தன்னுடைய முதல் போட்டியை விளையாடினார். இதேபோல ஒருநாள் போட்டிகளில் அதே ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தன்னுடைய முதல் போட்டியில் அறிமுகமாகி விளையாடினார். இந்த இரு போட்டிகளுமே பாகிஸ்தானுக்கு எதிராக கபில்தேவுக்கு அமைந்தது.
100 விக்கெட்டுகள்.. 1000 ரன்கள்
தன்னுடைய அறிமுக போட்டிகளில் விளையாடி புகழ்பெற்ற கபில்தேவுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான 1979 -80ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் தன்னுடைய ஆல்-ரவுண்டர் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. 2 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 32 விக்கெட்டுகள் மற்றும் 278 ரன்களை அடித்து அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார் கபில்தேவ். இதன்மூலம் மிகவும் இளம்வயதில் 100 விக்கெட்டுகள் மற்றும் 1000 ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.
உலக கோப்பை பரிசு
இத்தகைய திறமைகள் அவருக்கு கேப்டன் பொறுப்பை பெற்று தந்தது. கவாஸ்கர் தன்னுடைய கேப்டன் பதவியிலிருந்து விலகிய நிலையில், கபில்தேவுக்கு அந்த பொறுப்பு சென்றது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார் கபில். இந்திய ரசிகர்களின் கனவான உலக கோப்பையை கடந்த 1983ல் பெற்றுத்தந்து இந்திய ரசிகர்களை பெருமிதம் கொள்ள செய்தார்.
இந்தியாவில் கிரிக்கெட் அந்தஸ்து
இந்த வெற்றிக்கு பிறகே இந்தியாவில் கிரிக்கெட்டின் அந்தஸ்து அதிகமாக உயர்ந்தது. தெருக்கு தெரு, வீட்டுக்கு வீடு கிரிக்கெட் கனவில் இளைஞர்கள், குழந்தைகள் என அதிகமானோர் பயிற்சி மேற்கொண்டது இந்த உலக கோப்பை வெற்றிக்கு பிறகே. அதற்கு காரணமாக இருந்தார் கபில்தேவ். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை கிரிக்கெட் விளையாட அனுமதித்ததற்கு இந்த வெற்றி காரணமாக இருந்தது.
கபில்தேவ் அதிரடி
இந்த தொடரில் ஜிம்பாப்வே அணியிடம் 17 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திண்டாடிக் கொண்டிருந்த நிலையில், அதிரடியாக களம் இறங்கி 138 பந்துகளில் 175 ரன்களை அடித்து அந்த போட்டியின் வெற்றிக்கு காரணமானார். இதைதொடர்ந்து இந்திய அணிக்கு வெற்றி மட்டுமே காத்திருத்து. தொடர்ந்து லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள், அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் இறுதிப்போட்டியில் மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிகளை அலறவிட்டு ஓரங்கட்டியது இந்திய அணி. கோப்பையையும் கைகொண்டு நாடு திரும்பியது.
அரையிறுதியில் இந்தியா தோல்வி
இதையடுத்து 1987ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியுற்றது. அந்த போட்டியில் 6க்கு பதிலாக பவுண்டரி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அம்பயர்களிடம் ஆலோசித்து இங்கிலாந்தின் ஸ்கோரை 268லிருந்து 270ஆக உயர்த்த கபில் ஒப்புக் கொண்டார். அந்தப் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது.
கேப்டன் பதவியை துறந்தார்
இதையடுத்து இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, இதையடுத்து மீண்டும் கேப்டன் பதவியை ஏற்கப் போவதில்லை என்ற தீர்க்கமான முடிவை கபில் எடுத்தார். இதையடுத்து கடந்த 1994ல் அவர் ஓய்வு பெறும்வரை கேப்டன் பொறுப்பை ஏற்கவில்லை. தான் ஓய்வு பெற்றபோது டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையுடன் ஓய்வு பெற்றார்.
கிரிக்கெட் வர்ணனையாளர்
ஓய்விற்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கி தன்னை நிரபராதி என்று நிரூபித்தார். இதேபோல கடந்த 2004ல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பணியாற்றினார். தொடர்ந்து கிரிக்கெட் விமர்சகராகவும் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார்.