தடை பெற்றார்
கவுன்டி போட்டிகளில் சக வீரர் ஒருவரை மேட்ச் பிக்சிங் செய்ய தூண்டுகோலாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் டேனிஷ் மீது தடை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டால் விதிக்கப்பட்ட தடையை சர்வதேச அளவில் அனைவரும் பின்பற்ற துவங்கினர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதன் பின் டேனிஷ் இடம் பிடிக்கவில்லை. டேனிஷ் கனேரியா பாகிஸ்தானின் வெற்றிகரமான சுழற்பந்துவீச்சாளராக விளங்கினார். 61 டெஸ்ட் போட்டிகளில் 261 விக்கெட்கள் வீழ்த்தி உலகின் முன்னணி பந்துவீச்சாளராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எசக்ஸ் அணியில் பிக்சிங்
எசக்ஸ் அணியில் 2012ஆம் ஆண்டில் ஆடி வந்தார் டேனிஷ் கனேரியா. அப்போது சக வீரர் மெர்வின் வெஸ்ட்பீல்ட்-ஐ அனு பட் என்ற புக்கியிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். முதல் ஓவரில் 12 ரன்கள் கொடுத்தால் 6000 பவுண்டுகள் கொடுப்பதாக அணு பட், வெஸ்ட்பீல்டிடம் கூறியுள்ளார். அதை ஒப்புக்கொண்ட வெஸ்ட்பீல்ட் முதல் ஓவரில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்தார். எனினும், அந்த பணத்தை பெற்றுக் கொண்டார் அவர்.
மாட்டிக்கொண்ட வீரர்கள்
இந்த விவகாரத்தை கண்டுபிடித்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு மெர்வினுக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்ததோடு, இரண்டு மாத சிறை தண்டனையும் பெற்றார். டேனிஷ் கனேரியா செய்த குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவருக்கு தடை மட்டும் விதித்தது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு.
மன்னிப்பு கோரினார்
தன் மீதான குற்றங்களை மறுத்து வந்த டேனிஷ் கனேரியா ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரி உள்ளார். தான் மெர்வின் வெஸ்ட்பீல்ட், எசக்ஸ் அணி வீரர்கள், எசக்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் அதன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கூறி உள்ளார். தான் முதலில் குற்றத்தை மறுத்ததற்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த தன் தந்தை தான் காரணம் என கூறியுள்ளார். அவர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை குலைக்கும் வகையில் தான் செய்த குற்றத்தை தன்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார் டேனிஷ் கனேரியா.