ஐசிசி தொடர்கள்
ஐசிசி நடத்தும் தொடர்கள் தவிர, மூன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்க ஐசிசி இதுவரை அனுமதி அளித்ததில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி உள்ளிட்ட தொடர்களும், ஐசிசி அனுமதியுடன் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மட்டுமே மூன்றிற்கும் மேற்பட்ட முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற கிரிக்கெட் நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்கள்.
சூப்பர் சீரீஸ் திட்டம்
இந்த நிலையில் தான் பிசிசிஐ தலைவர் கங்குலி, தற்போது கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய நாடுகளாக பார்க்கப்படும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை இணைத்து சூப்பர் சீரீஸ் திட்டம் வகுத்தார்.
அந்த திட்டம்
அதன்படி இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேலும் ஒரு முக்கிய கிரிக்கெட் அணி மட்டும் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை ஒவ்வொரு ஆண்டும் நடத்தவும், இந்த தொடர் 2021 முதல் துவங்கலாம் என்றும் கங்குலி மற்ற அணிகளிடம் பேசி வருகிறார்.
இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை
கடந்த வாரம் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டிடம் இது குறித்து முதற்கட்டமாக பேசி இருக்கிறார் கங்குலி. இங்கிலாந்து அணி இந்த திட்டம் குறித்து மற்ற அணிகளிடம் கலந்து பேச வேண்டும் என தெரிவித்துள்ளது.
ஐசிசிக்கு எதிரான திட்டம்
கங்குலியின் இந்த முடிவுக்கு மற்றொரு காரணம், ஐசிசி தான். கடந்த சில ஆண்டுகளில் ஐசிசி அமைப்பு, பிசிசிஐ அமைப்பிற்கு எதிராக சில செயல்பாடுகளை செய்து வருவதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதை எதிர்த்தே கங்குலி இந்த தொடரை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
ரஷித் லதிப் விமர்சனம்
இந்த நிலையில், இந்தியாவின் இந்த அதிரடி திட்டத்தை கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்திருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லதிப். அவர் கூறுகையில், இந்த தொடரால் மற்ற உறுப்பினர் நாடுகள் பாதிப்படையும் என தெரிவித்தார்.
தோல்வி அடையும் என்றார்
"அது போன்ற தொடரை நடத்துவதன் மூலம், இந்த நான்கு நாடுகளும் மற்ற உறுப்பினர் நாடுகளை தனிமைப்படுத்த விரும்புகின்றன. இது நல்ல செய்தி அல்ல. ஆனால், இது சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட "பிக் த்ரீ" திட்டம் போல தோல்வி அடையும்" என்றார் ரஷித் லதிப்.
பல்வேறு தடைகள் உள்ளன
கங்குலியின் இந்த சூப்பர் சீரிஸ் திட்டம் நடைமுறைக்கு வர பல்வேறு தடைகள் உள்ளன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஒரு அணி இந்த தொடருக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பின் நான்கு அணிகளும் சேர்ந்து ஐசிசியிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
வசை பாடிய லதிப்
இத்தனை நடைமுறைகளை தாண்டி, ஐசிசி ஒப்புதல் தராமலும் போகலாம். எனினும், கங்குலியின் இந்த திட்டத்தை "தோல்வி பெறும்" என வசை பாடி இருக்கிறார் ரஷித் லதிப்.