பெர்த்: தான் அவமானப்படுத்திய பத்திரிகையாளரிடம் விராத் கோஹ்லி மன்னிப்பு கேட்பதன் மூலம் இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரலாம். இதுதான் ஒரே வழி என்று விராத் கோஹ்லிக்கு முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் வி.வி.எஸ்.லட்சுமண் அறிவுரை கூறியுள்ளார்.
கோஹ்லி விவகாரம் சூடு பிடித்துள்ளது. ஆளாளுக்கு கோஹ்லியை விமர்சிக்க ஆரம்பித்து விட்டதால் வேறு வழியில்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியமும் இன்று கோஹ்லியை கண்டித்து அறிக்கை விட்டது.
இந்த நிலையில் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், வி.வி.எஸ்.லட்சுமண், மேற்கு இந்தியத் தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா ஆகியோரும் கோஹ்லி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
கவாஸ்கர் கருத்து
கவாஸ்கர் கூறுகையில், மீடியாக்களை கையாளுவது என்பது சுலபமானதல்ல. இருப்பினும் எனது காலத்தில் நான் மிகவும் பதட்டமான சமயத்திலும் நிதானம் காத்துள்ளேன்.
கண்ணாடிக்கு முன்பு நின்று கொண்டு என்னைப் பாதிக்கும், என்னால் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அம்சங்கள் அனைத்தையும் உதறி விட்டுத்தான் நான் வெளியே வருவேன். என்னை நானே கூலாக வைத்துக் கொள்ள முயற்சிப்பேன். டோணியைப் போல, லட்சுமணைப் போல, பழம்பெரும் டென்னிஸ் வீரர் போர்க் போல அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே நினைத்துக் கொள்வேன். அதிலும் நெருக்கடியான சமயத்தில் மிக மிக கூலாக இருக்க விரும்புவேன்.
கிரிக்கெட் முன்னேற்றத்தில் மீடியா முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. வீரர்கள், நி்ர்வாகிகள், மீடியா, விசிறிகள் மற்றும் ஸ்பான்சர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மீடியாவும், கண்ணால் காண்பதெல்லாம் மெய் என்று இல்லாமல், தீர விசாரித்து எழுதுவது நல்லது. ஊகச் செய்திகளை அவர்கள் தவிர்க்கலாம் என்றார் கவாஸ்கர்.
மன்னிப்பு கேட்பதே நல்லது -லட்சுமண்
விவிஎஸ் லட்சுமண் கூறுகையில், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரிடம் கோஹ்லி மன்னிப்பு கேட்பதன் மூலம் இதை முடிக்க முயலலாம். இதுதான் சிறந்த வழியும் கூட. சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரிடம் சென்று, நான் தவறாக நினைத்துக் கொண்டு எழுதியவரை விட்டு விட்டு உங்களிடம் கோபப்பட்டு விட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டாலே போதும், பிரச்சினை முடிந்து விடும்.
நான் எப்போதுமே கோபம் கொண்டதில்லை. நிதானம் இழந்ததில்லை. ஒரே ஒரு முறை மட்டுமே நான் கோபம் அடைந்துள்ளேன். ஆனால் அதுவும் கூட நான்கு சுவருக்குள், டிரஸ்ஸிங் ரூமுக்குள் நடந்தது. இது எல்லோருக்கும் தெரியும் என்றார் லட்சுமண்.
விட்டுட்டு அடுத்த வேலையை பாருங்க - லாரா
பிரையன் லாரா கூறுகையில், மீடியா - வீரர்கள் உறவு என்பது கடுமையானது, கடினமானது. ஈஸியானதல்ல. அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் வரத்தான் செய்யும். இருப்பினும் இரு தரப்பும் சமசரமடைந்து உலகக் கோப்பையில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.
இந்த விவகாரம் இந்திய அணியின் கவனத்தை திசை திருப்பும் என நான் கருதுகிறேன். இந்தப் பிரச்சினையால் கோஹ்லி ஒன்று மனம் தளரலாம் அல்லது தான் செய்தது சரி என்று உறுதிபட தீர்மானிக்கலாம். எப்படியும் அவருக்குள் ஒரு பாதிப்பை இது ஏற்படுத்தும் என்றே நான் கருதுகிறேன் என்றார் லாரா.