“லண்டன் மேல் காதல்” கொள்ளாமல் ஒழுங்கா பயிற்சி பண்ணுங்க..... விளாசும் கவாஸ்கர்
டெல்லி : முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் இங்கிலாந்தில் சொதப்பி வரும் இந்திய அணியை தொடர்ந்து காய்ச்சி எடுத்து வருகிறார். முதலில் இருந்தே பல தவறுகளை சுட்டிக் காட்டினார் கவாஸ்கர்.
ஆனால், அது எதையும் கருத்தில் கொள்ளாத இந்திய அணி நிர்வாகம், தன் விருப்பப்படி வீரர்களை தேர்வு செய்தது. பயிற்சிகளுக்கான திட்டமிடலும் சரியாக இல்லை. முன்பு கவாஸ்கர் மட்டுமே விமர்சித்த நிலையில், இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டதால், தற்போது அனைத்து பக்கங்களில் இருந்தும் கடும் விமர்சனம் வருகிறது.

இந்த நிலையில் இரண்டாம் போட்டியின் தோல்விக்கு பின்னும், இந்திய அணியின் பயிற்சித் திட்டங்கள் சரியாக இல்லை என கூறியிருக்கிறார் கவாஸ்கர்.
இரண்டாவது போட்டியில் நான்காவது நாளே போட்டி முடிவடைந்த நிலையில், பயிற்சி செய்ய கூடுதலாக ஒருநாள் கிடைத்தது. அதை பயன்படுத்தி அடுத்த போட்டி நடைபெறும் நாட்டிங்காம் நகருக்கு செல்லாமல் லண்டனிலேயே இருந்தனர். இதை சுட்டிக்காட்டியுள்ள கவாஸ்கர், இந்திய வீரர்கள் “லண்டன் மேல் காதல்” கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் நாட்டிங்காம் கிளம்பிச் செல்லாமல் இருக்கிறார்கள் என விளாசித்தள்ளி இருக்கிறார்.
மேலும், இங்கிலாந்தில் ஓவல் மைதானத்தை தவிர எங்கும் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவையில்லை. அதனால், ஒரு சுழல் பந்துவீச்சாளரை நீக்கிவிட்டு கருண் நாயரை ஆறாம் இடத்தில களமிறக்க வேண்டும். கோஹ்லியும் தற்போது காயத்தில் இருப்பதால், கூடுதல் பேட்ஸ்மன் அணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும் என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.
அதே போல, தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு இளம் வீரரான ரிஷப் பண்ட்-ஐ விக்கெட் கீப்பராக ஆட வைக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். அதே போல, காயமடைந்து இருக்கும் கோஹ்லி, நடக்கவோ, குனியவோ முடியாமல் போனால் அன்றி மூன்றாவது போட்டியில் ஆட வேண்டும். வலுவில்லாத அணிக்கு அவர் மிகப்பெரிய பலம் என கூறியுள்ளார்.
இந்திய அணி தற்போது 0-2 என டெஸ்ட் தொடரில் பின்தங்கி உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட தொடரை இழக்க நேரிடும்.
Story first published: Tuesday, August 14, 2018, 17:59 [IST]
Other articles published on Aug 14, 2018


Click it and Unblock the Notifications