மும்பை : 2011 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங்.
அவரைப் போன்ற ஒரு வீரர் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இல்லையே என்ற ஏக்கம் சிலருக்கு உள்ளது.
இதே கேள்வியை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் கிளென் மெக்கிராத்திடம் கேட்ட போது தற்போதைய அணியில் இடம் பெற்று இருக்கும் இரு இந்திய வீரர்கள் பெயரைக் குறிப்பிட்டார்.
"ஹர்திக் பண்டியா அந்த (யுவராஜ் சிங் போல) வேலையை செய்வார். தினேஷ் கார்த்திக்கும் நல்ல பினிஷர் தான். அவர்கள் அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்வார்கள்" என்று கூறினார் மெக்கிராத்.
யுவராஜ் சிங் 2011 உலகக்கோப்பை தொடரின் நாயகன் ஆவார். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பினிஷிங் செய்து இந்திய அணியின் வெற்றிகளை உறுதி செய்தார். பகுதி நேர பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார்.
யுவராஜ் சிங் கடைசி நேரத்தில் சரியாக பினிஷிங் செய்யாமல் போயிருந்தால், அப்போது இந்தியா பல போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கும். அது போன்ற பினிஷர்கள் இந்திய அணியில் யார்?
மெக்கிராத் கூறுவது போல ஹர்திக் பண்டியா இதுவரை பெரிய அளவில் எந்த போட்டியிலும் இந்திய அணிக்கு வெற்றிகள் பெற்றுக் கொடுத்ததில்லை. ஆனால், தினேஷ் கார்த்திக் பல போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.
ஹர்திக் பண்டியா அதிரடி வீரர் என்றாலும், அணிக்கு தேவையான நேரங்களில் பொறுப்பாக ஆடி கடைசி வரை நின்று வெற்றி தேடிக் கொடுக்கும் கலையை அவர் இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை.
எனினும், உலகக்கோப்பை போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமே. அவர் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் என்ற அடையாளத்துடனேயே இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். ஒருவேளை இரண்டுக்கும் மேற்பட்ட பேட்ஸ்மேன்களுக்கு காயம் ஏற்பட்டால் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை பெறுவார்.
இந்திய அணியில் இப்போது இருக்கும் வீரர்களிலேயே தோனி தான் சிறந்த பினிஷர். அதை எப்படி மெக்கிராத் மறந்தார் என்பது புரியவில்லை. இந்த ஆண்டு நடந்த பல ஒருநாள் போட்டிகளில், ஐபிஎல் போட்டிகளில் தோனி சிறப்பாக பினிஷிங் செய்து வெற்றி தேடிக் கொடுத்துள்ளார். நல்ல பார்மிலும் இருக்கிறார்.