ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி.. தசைப் பிடிப்பு சரியானது.. முதல் போட்டியில் இடம் பெற்றார் டோணி!
டாக்கா: கேப்டன் டோணிக்கு ஏற்பட்டிருந்த தசைப் பிடிப்பு சரியாகி விட்டதால் அவர் இன்று வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது ஆசியாக் கோப்பைப் போட்டியில் விளையாடுகிறார்.
ஆசியாக் கோப்பை டுவென்டி 20 தொடர் இன்று வங்கதேசத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டித் தொடரில் இன்று முதல் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன.
இப்போட்டித் தொடருக்கு முன்பாக கேப்டன் டோணிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டதால் அவர் முதல் போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் விக்கெட் கீப்பராக பார்த்திவ் படேல் சேர்க்கப்பட்டார்.

இப்போது சரியாகி விட்டது
இந்த நிலையில் தற்போது டோணிக்கு தசைப் பிடிப்பு குணமாகியுள்ளது. அவர் விளையாடும் நிலையில் உள்ளதாகவும், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அணி மேலாளர் நிஷாந்த் அரோரா கூறியிருந்தார்.

குணமடைந்தார்
டோணி நன்கு குணமடைந்து வருகிறார். போட்டிக்கு முன்பாக அவரது உடல் நிலை பரிசோதிக்கப்படும். அதன் பின்னர் அவர் ஆடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார் அரோரா.

டோணி முக்கியம்.. கோஹ்லி
இதற்கிடையே, விராத் கோஹ்லி கூறுகையில், டோணி இந்திய அணியின் நடுக்களத்திற்கு மிகவும் முக்கியமானவர், தூண் போன்றவர். பார்த்திவ் படேல் அணியில் சேர்க்கப்படுவதாக இருந்தால் எங்களது பேட்டிங் ஆர்டரிலும் மாற்றம் செய்ய வேண்டி வரும் என்றார்.

டோணி இல்லாட்டி என்ன - மொர்தஸா
இதற்கிடையே, வங்கதேச கேப்டன் மஷ்ரேப் மொர்தஸா கூறுகையில், இந்திய அணி மிகவும் வலுவான பேட்டிங் ஆர்டரைக் கொண்டது. டோணி இல்லாவிட்டாலும் கூட அது வலுவானதே என்றார் அவர்.

டோணி இடம் பெற்றார்
இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் டோணியும் இடம்பெற்றார். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications