இனி எந்த நட்பும் இல்லை
யுவராஜ், ஹர்பஜன் அது குறித்து ஒரு கோரிக்கை வீடியோவை பதிவிட்டனர். இந்த நிலையில், அப்ரிடி தற்போது இந்தியா பற்றி மோசமாக பேசி இருப்பது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதனால், இனி அப்ரிடியுடன் எந்த நட்பும் இல்லை என இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.
வருத்தம் அளிக்கிறது
இது பற்றி இந்தியா டுடேவிடம் பேசிய ஹர்பஜன் சிங் "ஷாஹித் அப்ரிடி இப்போது செய்துள்ள விஷயம் என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது. நம் நாட்டைப் பற்றியும், நம் பிரதமரைப் பற்றியும் மோசமாகப் பேசுவதை ஏற்க முடியாது" என்று கூறி உள்ளார்.
கோரிக்கை வைக்க சொன்னார்
"உண்மையில் அப்ரிடி தனது தொண்டு நிறுவனத்துக்கான கோரிக்கை வைக்கும்படி எங்களிடம் கேட்டார். ஒரு நல்ல எண்ணத்தில், மனிதநேயத்துக்காக, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் அதை செய்தோம்" என்றார் ஹர்பஜன் சிங்.
உதவி மட்டுமே செய்தோம்
"நம் பிரதமர் கூட கொரோனா வைரஸ் என்பது எல்லைகள், மதங்கள் மற்றும் சாதிக்கு அப்பாற்பட்ட ஒரு யுத்தம் என்று தான் கூறினார். நாங்கள் என்ன காரணத்திற்காக அதை செய்கிறோம் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தோம். நெருக்கடியில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே அதை செய்தோம்" என்று கூறினார் ஹர்பஜன் சிங்.
உரிமை இல்லை
"ஆனால், இவர் நம் நாட்டைப் பற்றி மோசமாகப் பேசுகிறார். இப்போது நான் சொல்ல விரும்புவது ஷாஹித் அப்ரிடியுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தான். நம் நாட்டிற்கு எதிராக மோசமாக பேச அவருக்கு உரிமை இல்லை. அவர் தனது நாட்டில், தன் வரம்புகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்." என்றார் ஹர்பஜன் சிங்.
நாட்டுக்காக துப்பாக்கியை எடுப்பேன்
"இன்று அல்லது நாளை, தேவைப்பட்டால் நாட்டுக்காக, எங்கேயும், நாட்டின் எல்லையில் இருந்தாலும், நாட்டுக்காக துப்பாக்கியை எடுக்கும் முதல் நபராக நான் இருப்பேன்." என தான் தேவை ஏற்பட்டால் இராணுவத்தில் சேருவேன் என்றும் கூறினார் ஹர்பஜன் சிங்.
எந்த உறவும் இல்லை
"ஒருவர் என்னிடம் மனிதநேயத்திற்காக ஒரு வேண்டுகோள் வைத்தார். நான் என்னால் முடிந்ததை செய்தேன். இப்போது முதல் ஷாஹித் அப்ரிடியுடனும் எனக்கு எந்த உறவும் இல்லை, பிணைப்பும் இல்லை" என்று திட்டவட்டமாக கூறினார் ஹர்பஜன் சிங்.
ஏமாற்றம்
யுவராஜ் சிங்கும் தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், "அப்ரிடி, இந்திய பிரதமர் மோடி குறித்து பேசிய கருத்துக்கள் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய நாட்டுக்காக ஆடிய பொறுப்புள்ள குடிமகனாக அந்த வார்த்தைகளை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்." என கூறி உள்ளார்.
மறுபடியும் செய்ய மாட்டேன்
மேலும், "நீங்கள் (அப்ரிடி) கேட்டுக் கொண்டதற்காக மனிதாபிமான அடிப்படையில் நான் கோரிக்கை வைத்தேன். ஆனால், மறுபடியும் அப்படி செய்ய மாட்டேன்" என அப்ரிடிக்காக இனி எந்த உதவியும் செய்யப் போவதில்லை என உறுதியாக கூறி உள்ளார் யுவராஜ் சிங்.