மாறிய யோசனை
ஆம்! முதலில் ஆடிய இலங்கை நிர்ணயித்த 276 ரன்கள் இலக்கை, சேஸிங் சேய்த இந்தியா 193-7 என்ற நிலையில் இருந்து மீண்டு வந்து போட்டியை வென்றது. இதற்கு மிக முக்கிய காரணம், 8வது பேட்ஸ்மேனாக களமிறங்கி 69 ரன்கள் குவித்த தீபக் சாஹர் தான். அவர் போட்டியை மட்டும் வென்று கொடுத்துவிடவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவையும் பதட்டப்படுத்தி இருக்கிறார். அவர்களை வேலையை, யோசனையை மாற்றி அமைத்திருக்கிறார்.
ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர்
யெஸ்! இந்திய அணியில் தற்போது நிலவும் வறட்சி என்பது ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டருக்கானது. ஜடேஜா, அஷ்வின் போன்ற ஸ்பின் ஆல் ரவுண்டர்கள் இருந்தாலும், ஒரு அணி டாமினேட் செய்ய வேண்டுமெனில், வேகப்பந்து ஆல் ரவுண்டர் தேவை. அதாவது, மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் பந்தும் வீசணும், குறைந்தது 40 ரன்னாவது அடிக்கணும். ஹர்திக் பாண்ட்யா இந்த ஸ்லாட்டை நிரப்ப வந்த தூதுவனாகவே பார்க்கப்பட்டார். ஆனால், விதி அவரது முதுகு வலி வடிவில் வந்து விளையாட, இப்போது 3 ஓவர் முழுதாக வீசுவதற்குள் மூச்சு வாங்குகிறார்.
மெச்சூரிட்டி ஷாட்ஸ்
இந்த நிலையில் தான் தீபக் சாஹர், "நான் இருக்கிறேன்" என்று சூசகமாக தனது 69 ரன்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதில், நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம், அவர் 82 பந்துகள் வரை களத்தில் நின்றது. கிட்டத்தட்ட முழுதாய் 14 ஓவர்கள் பேட்டிங் செய்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் ஒரு பவுலரின் அபாரமான பெர்ஃபாமன்ஸ் இது. பயிற்சியாளர் டிராவிட், "அனைத்து பந்துகளை சந்தித்து விளையாடு" என்று சொல்லி அனுப்பியதால் மட்டும் அவர் நன்றாக பேட்டிங் செய்துவிடவில்லை. அவரது சில ஷாட்களை தவிர்த்து, பெரும்பாலான ஷாட்கள் மெச்சூரிட்டி ரகம்.
இனி நிறைய போட்டிகளில்
இவையனைத்தும் தேர்வுக்குழுவினரை யோசிக்க வைத்துள்ளது. தீபக் சாஹரிடம் ஒரு பேட்டிங் எபிலிட்டி இருக்கிறது என்பதை புரிய வைத்திருக்கிறது. ஸ்விங் பவுலிங்கில் மாஸ்டரான புவனேஷ் குமார், இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகமும், கேள்வியும் பெரிய அளவில் ஓடிக் கொண்டிருக்க, சாஹரின் பேட்டிங் சற்று ஆறுதல் அளித்திருக்கிறது. 2வது ஒருநாள் போட்டியிலேயே பவுலிங் செய்ய முடியாமல், 3வது ஓவரிலேயே முதுகை பிடித்து பாண்ட்யா துடித்ததை ரசிகர்கள் மட்டுமல்ல, தேர்வுக்குழுவினரும் பார்த்தனர். ஸோ, ஒட்டுமொத்தமாக கூட்டிக் கழித்து பார்த்தால், உலகக் கோப்பை டி20 மற்றும் எதிர்வரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தீபக் சாஹரின் Inclusion அதிகமாக இருக்கும் என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அதாவது வாய்ப்புகள் அதிகமாக தரப்படலாம் என்று நம்பலாம்.