உலக நாடுகள் முடக்கம்
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பையடுத்து 30,000 பேர் உயிரிழந்துள்ளனர். 6.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகமே வீட்டிற்குள் முடங்கியுள்ள சூழலில் விளையாட்டு உலகமும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளது. இதையடுத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பல்வேறு விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் மனம்திறந்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் தீவிரம்
இந்நிலையில், மைதானத்தில் விளையாட முடியாத விளையாட்டுகளை தற்போது சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர். அவர்களின் சேட்டைகள், மனம்திறப்புகள் போன்றவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அவர்களின் விளையாட்டுகளை மைதானத்தில் பார்க்க முடியாவிட்டாலும், சேட்டைகளை இவ்வாறு பார்த்து திருப்தி அடைந்து வருகின்றனர்.
சஹல் பாராட்டு
பாடகர் ராகுல் வைத்யாவுடன் இன்ஸ்டாகிராமில் சஹல் மேற்கொண்ட லைவ் வீடியோ சாட்டிங்கில், அணியின் பாட்டுத்தலைவன் ஹர்திக் பாண்டியா என்று குறிப்பிட்டுள்ளார். அணியின் சுரேஷ் ரெய்னா, மோகித் சர்மா ஆகியோரும் சிறப்பாக பாடுவார்கள் என்றும் சஹல் குறிப்பிட்டுள்ளார். கொரோனா குறித்தே தொடர்ந்து பேசிவரும் நிலையில், ஏன் இசைகுறித்து பேசக்கூடாது என்று தான் கருதியதாகவும் அதற்காகவே இந்த வீடியோவை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய பந்துவீச்சு குறித்து சஹல்
மேலும் ரோகித் சர்மாவுடன் இன்ஸ்டாகிராமில் சஹல் மேற்கொண்ட மற்றொரு வீடியோ விவாதத்தில், நீண்ட காலமாக தான் சராசரியான பந்துவீச்சை மட்டுமே வெளிப்படுத்தி வருவதாகவும், 2 அல்லது 3 விக்கெட்டுகளை மட்டுமே தான் வீழ்த்துவதாகவும், மேலும் சிறப்பான பந்துவீச்சை தான் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தன்னை தானே சுயவிமர்சனம் செய்து கொண்டார்.