அதிரடி பாண்டியா
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வரும் பல இளம் வீரர்கள், உலக கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிட்டு சொல்லும் படியாக இருப்பவர் ஹர்திக் பாண்டியா. அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வரும் அவர் சிக்சர்களை தல தோனி பாணியில் அடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்.
91 ரன்கள் குவிப்பு
நடப்பு ஐபிஎல் தொடரில் பாண்ட்யாவின் அதிரடி ரன் குவிப்பு, உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், பேயாட்டம் ஆடி அவர் குவித்த 91 ரன்களை சொல்லலாம். தோனியின் சிக்சர் பாணியை தான் அவர் பின்தொடர்கிறார் என்பதற்கு அந்த போட்டியையே ஒரு உதாரணமாக சொல்லலாம்.
பாராட்டும் யுவி
பாண்டியாவின் சிக்சர்கள் குறித்து 20 ஓவர் உலக கோப்பை தொடரில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை வெளுத்து சாதனை படைத்த யுவராஜ் சிங், குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:ஹர்திக் பாண்டியா தற்போது அற்புதமாக விளையாடி வருகிறார். நல்ல பார்மில் உள்ளார். அதை அவரிடம் இருந்து உலக கோப்பை தொடரிலும் எதிர்பார்க்கலாம்.
ஸ்பெஷலாக அமையும்
இது தொடர்பாக நானே, பாண்டியாவிடம் பேசியிருக்கிறேன். உலக கோப்பையில் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்படுவாய். வரும் உலக கோப்பை தொடர் ஸ்பெஷலாக அமையும் என்று சொல்லியிருக்கிறேன். அவரது பவுலிங்கும் சூப்பராக உள்ளது. இங்கிலாந்து மண்ணில் அவரால் சாதிக்க முடியும்.
அருமையான ஆட்டம்
பயிற்சி போட்டியிலும் அருமையாக ஆடி இருக்கிறார். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 பந்துகளில் 91 ரன்கள் குவித்திருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரிலேயே இது தான் அவருக்கு சிறந்த ஆட்டம். ஏன் என்றால், 4 முக்கிய பந்து வீச்சாளர்களின் பந்துகளை அந்த போட்டியில் துவம்சம் செய்திருக்கிறார்.
4வது இடம் முக்கியம்
உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் 4வது இடம் என்பது மிக முக்கியமானது. முழுத் தொடரையும் மனதில் வைத்து அந்த இடத்துக்கான வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டிகள் நடக்கும் இடங்கள் நமது நாட்டில் இருப்பது போன்று இருக்காது. முற்றிலும் வேறாக இருக்கும். முக்கிய அணிகளுடன் மோத இருப்பதால், நமது வீரர்களுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது என்றார்.