கெயில் உற்சாகம்
ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரவைப்பதற்காகவே தான் விளையாடுவதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். நேற்றைய ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக விளையாடிய கெயில், 53 ரன்களை குவித்து அந்த அணியின் இரண்டாவது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்.
பதட்டம் இருக்காது
தொடர்ந்து ஐபிஎல் பட்டியலில் 8வது இடத்திலேயே தொடர்ந்தாலும் இந்த வெற்றி பஞ்சாப் அணிக்கு ஆசுவாசத்தை அளித்துள்ளது. இந்நிலையில், யூனிவர்ஸ் பாஸ் என்று தன்னை கூறிக்கொள்ளும் கிறிஸ் கெயில் விளையாடும்போது தனக்கு பதட்டமெல்லாம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
3வதாக இறங்கிய கெயில்
ஷார்ஜாவில் பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள கெயில், தன்னை மூன்றாவதாக களமிறங்கி விளையாட அணி கேட்டுக் கொண்டதாகவும், எந்த இடத்தில் விளையாடினாலும் அது தனக்கு பிரச்சினையை தராது என்றும் கூறியுள்ளார். கிறிஸ் கெயில் வழக்கமாக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுவது வழக்கம்.
பசி கொண்ட சிங்கம்
போட்டியில் விளையாடிய கேப்டன் கே.எல். ராகுலும் அரைசதம் அடித்து 448 ரன்களுடன் ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் கெயில் பசி கொண்ட சிங்கம் என்றும் அவரை அப்படியே வைத்திருப்பது சிறந்தது என்றும் ராகுல் கூறியுள்ளார்.