|
நீல நிறம்
போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே குவிந்து விட்ட இந்திய ரசிகர்கள்., ஒரே மாதிரியாக இந்திய வீரர்கள் போல நீல நிற சீருடையில் வந்து அசத்தினர். ஜன சமுத்திரமாக மாறிக் காணப்பட்ட அவர்களால் ஓவல் மைதானே நீல மயமாகக் காணப்பட்டது.
மஞ்சள் இல்லை
ஆஸ்திரேலிய ரசிகர்களைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருந்தது. விரல் விட்டு எண்ணும் அளவுக்கே அவர்களது தலைகள் காணப்பட்டன. அந்த அளவுக்கு கிட்டத்தட்ட 90 சதவீத பார்வையாளர்கள் இந்தியர்களாகவே இருந்தனர்.
ஜெர்சியை கொடுங்கப்பா
இதுகுறித்து வர்ணனையாளரான ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாட்டர் கூறுகையில், இந்திய அணிக்கு அவர்களது ரசிகர்கள் மிகப் பெரிய ஆதரவு கொடுத்துள்ளனர். ஆச்சரியமாக இருக்கிறது. கூட்டத்தினர் மத்தியில் மஞ்சள் கலரையே காண முடியவில்லை. டீ பிரேக்கில் நானே கொஞ்சம் மஞ்சள் கலர் ஜெர்சியை எடுத்துக் கொண்டு போய் அணியக் கொடுக்கலாம் என கருதுகிறேன் என்று சிரித்தபடி கூறினார்.
பேராதரவு
வழக்கமாகவே இந்தியாவுக்கு இங்கிலாந்தில் நல்ல ரசிகர் கூட்டம் உள்ளது. காரணம் அங்கு இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அதை விட முக்கியமாக தெற்காசிய அணிகளுக்கு அங்கு ரசிகர்கள் அதிகம். என்றாலும் இன்று ஓவலில் கூடிய கூட்டம் பிற அணிகளை மிரள வைத்துள்ளது. இன்று தோனியும் சற்று வேகம் கூட்டியிருந்தால் ரசிகர்களுக்கு இன்னும் செம விருந்தாக அமைந்திருக்கும்.
பிரித்து மேய்ந்த வீரர்கள்
இந்தியா இப்போட்டியில் ஆரம்பத்தில் நிதானம் காட்டியது. ஆனால் பின்னர் பிரித்து மேய்ந்து விட்டனர். ஷிகர் தவான், விராத் கோலி, டோணி, ஹர்திக் பாண்ட்யா பிரமாதமாக ஆடியதால் இந்தியா மிகப் பெரிய ஸ்கோரை எடுக்க முடிந்தது.