டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் பந்த்
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. கடந்த ஆண்டின் ரன்னர் அப் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியை இந்த சீசனில் கேப்டனாக வழிநடத்தவுள்ளார் ரிஷப் பந்த்.
ரிஷப் மகிழ்ச்சி
காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் ரிஷப் பந்த். இந்நிலையில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியிடம் தான் அதிகமாக கற்றுள்ளதாகவும் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் அவருக்கு எதிராக மோதவுள்ளது சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.
|
தோனியிடம் பெற்ற படிப்பினைகள்
டெல்லி கேபிடல்சின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள அவர் இந்த தொடரில் தன்னுடைய சொந்த அனுபவம் மற்றும் தோனியிடம் இருந்து தான் பெற்ற படிப்பினைகளை சிஎஸ்கேவிற்கு எதிராக பயன்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோப்பை வெல்ல தீவிரம்
தன்னை கேப்டனாக தேர்ந்தெடுத்த பயிற்சியாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பந்த், இதுவரை டெல்லி கேபிடல்ஸ் கோப்பையை வெல்லாத நிலையில் இந்த சீசனில் கோப்பையை வெற்றி கொள்ள தான் தீவிர முயற்சி மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் அணி சிறப்பாக முன்னேறியுள்ளதாகவும் ரிஷப் குறிப்பிட்டுள்ளார்.