டெல்லி: நான் பயப்படாமல் அதிரடியாக ரன் குவிக்க இந்திய அணியில் அப்போதிருந்த மிடில்-ஆர்டர் பேட்டிங் மிகவும் வலிமையாக இருந்ததுதான் காரணம். இப்போது நான் அணிக்காக ஆடினால் அதே அச்சமற்றத் தன்மையோடு ஆட முடியாது. ஏனெனில் இப்போதுள்ள இந்திய அணியின் நடுவரிசையில் நெருக்கடியை தாங்கும் பேட்ஸ்மேன்கள் இல்லை என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சேவாக், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி: ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற முறையில் அணிக்கு நல்ல தொடக்கம் தருவது மட்டுமே எனது வேலை. என்னை தவிர சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், கங்குலி ஆகியோர் நடுவரிசைக்கு பலம் சேர்க்கும் பேட்ஸ்மேன்களாக இருந்தனர்.
எனவே எந்த வித நெருக்கடியையும் அவர்கள் சமாளித்து அணி ரன் குவிக்க உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் நான் எனது விருப்பப்படி அடித்து நொறுக்கினேன்.
அதேநேரம், தற்போது நான் இந்திய அணிக்காக ஆடினால், என்னால் அப்படி அதிரடியாக ஆட முடியாது. ஏனெனில், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் நெருக்கடி நேரத்தில் சிறப்பாக ஆட முடியாதவர்களாக உள்ளனர். எனவே, ஓப்பனிங் பேட்ஸ்மேன் விக்கெட் விழாமலும் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை வந்துவிடும். இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.
கங்குலி எனக்காக அவர் களமிறங்கும் பொஷிஷனையே விட்டுத்தந்தார் என்றும் சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார். சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமணண் ஆகிய இந்தியா கண்ட மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில், சேவாக் கடைசியாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அதன்பிறகு பெயர் சொல்லும் வகையில் டெஸ்ட்-ஒன்டேக்களில் சிறப்பாக ஆடும் பேட்ஸ்மேனாக இன்னும் யாரும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.