ஜஸ்ட் 2 ரன்களில்
ஜூன் 18ம் தேதி ஹராரே மைதானத்தில் இந்தியா, ஜிம்பாப்வே இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற்றது. அதில் இந்தியாவுக்கு 171 ரன்கள் என்ற வெற்றி இலக்கை ஜிம்பாப்வே நிர்ணயித்தது. அப்போட்டியில் இந்தியா வெறும் 2 ரன்களில் தோல்வியைத் தழுவியது.
6 பந்துகளில் 8 ரன்கள்
கடைசி ஓவரில் இந்தியாவுக்கு வெறும் 8 ரன்களே தேவைப்பட்டன. டோணி வேறு அப்போது ஆடிக் கொண்டிருந்தார். எனவே இந்திய ரசிகர்கள் கேஷுவலாகவே இருந்தனர். ஆனால் வேகப் பந்து வீச்சாளர் நெவில்லி மட்ஸிவா 6 ரன்களை மட்டுமே அந்த ஓவரில் விட்டுக் கொடுத்தார். இந்தியா தோல்வியடைந்தது.
தோல்வியால் வந்த வினை
அந்தத் தோல்வியால் தற்போது இந்தியாவின் ஐசிசி ரேங்குக்கு பாதிப்பு வந்துள்ளது. டி20 தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது. டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றிருந்தால் முதலிடத்தைப் பிடித்திருக்க முடியும்.
மே 4ம் தேதி பறி கொடுத்தது
முதலிடத்தில் இருந்து வந்த இந்தியா கடந்த மே 4ம் தேதிதான் இந்த இடத்தை நியூசிலாந்து அணியிடம் இழந்தது. அதன் பிறகு முதலிடத்தைப் பிடிக்க முடியாமல் அது தவித்து வருகிறது.
4 புள்ளிகள் வித்தியாசத்தில்
நியூசிலாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 132 புள்ளிகளுடன் உள்ளது. அதை விட 4 புள்ளிகள் குறைந்து இந்தியா 128 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3வது இடத்திலும், அதற்கடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து, ஓமன், ஹாங்காங் ஆகிய நாடுகளும் உள்ளன.