இங்கிலாந்தை தோற்கடித்த பாகிஸ்தானால் ஐசிசி ரேங்கில் இந்தியாவுக்கு முன்னேற்றம்
மும்பை: இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியதன் மூலம், இந்திய அணி டெஸ்ட் ரேட்டிங்கில் முன்னேற்றம்காண உதவி செய்துள்ளது.
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் அமீரகத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வந்தன.
நேற்று முடிந்த 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 127 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இதன் மூலம், ஐசிசி டெஸ்ட் ரேட்டிங்கில் 4வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் 2வது இடத்துக்கு அதிரடியாக முன்னேறியுள்ளது.

பெரிய முன்னேற்றம்
இதற்கு முன்பு பாகிஸ்தான் 2006ம் ஆண்டில்தான் ஐசிசி ரேட்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது. அதன்பிறகு அந்த அணி கண்ட மிகப்பெரிய முன்னேற்றம் இதுவாகும்.

இந்தியா முன்னேற்றம்
இந்த ரேங்க் மாற்றத்தில் கவனிக்கப்பட வேண்டியது, 2வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், ரேங்கிங்கில் 5வது இடத்தில் இருந்த இந்தியா 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்துக்கு பின்னடைவு
டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் முன்பு, பாகிஸ்தான் 101 புள்ளிகளுடன் இருந்தது. தற்போது அது 106 புள்ளிகளை பெற்று 2வது இடத்துக்கு வந்துள்ளது. இங்கிலாந்தோ, 102 புள்ளிகளுடன் டெஸ்ட் தொடரை ஆரம்பித்தது. 99 புள்ளிகளுடன் தற்போது 6வது இடத்துக்கு சென்றுவிட்டது.

நோகாமல் வெற்றி
இவ்விரு அணிகள் நடுவேயான இந்த ஊசலாட்டம் காரணமாக வெற்றியே பெறாவிட்டாலும் இந்தியா முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா வென்றால் அது 2வது இடத்தை பிடிக்க முடியும்.

முதலிடத்தில் தென் ஆப்பிரிக்கா
தற்போதைய நிலையில், தென் ஆப்பிரிக்கா 125 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 106 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 2வது இடத்திலும், அதே புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும், 100 புள்ளிகளுடன் இந்தியா 4வது இடத்திலும், 99 புள்ளிகளுடன் நியூசிலாந்து 5வது இடத்திலும், அதே புள்ளிகளுடன் இங்கிலாந்து 6வது இடத்திலும் உள்ளன.

இலங்கை, வங்கதேசம்
இலங்கை 93 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 76 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், வங்கதேசம் 47 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், ஜிம்பாப்வே 5 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ளன.


Click it and Unblock the Notifications