ஐதராபாத் தடியடி
கிரிக்கெட் போட்டிகளின் டிக்கெட் விற்பனை என்றாலே ரசிகர்கள் ஏகபோகத்திற்கு கூடுவார்கள். அங்கு காவல்துறையினரும் பாதுகாப்பிற்கு நிற்கவைக்கப்படுவது வழக்கம் தான். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இன்று திடீரென ரசிகர்கள் மீது போலீசார் கோரமான தடியடியை நடத்தியுள்ளனர். இதில் பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். சிலர் உயிருக்கே ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிகிறது.
தடியடி எப்படி நடந்தது
இந்த கலவரத்திற்கு பல்வேறு விஷயங்கள் காரணமாக அமைந்துள்ளது. அதாவது ராஜீவ் காந்தி மைதானத்தில் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி நடைபெற்றது. இதன் பின்னர் 3 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் போட்டி நடைபெறுகிறது என்பதால் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
ஆஃப்லைனில் டிக்கெட்கள்
சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை பெரும்பாலும் ஆன்லைனில் தான் நடைபெறுகின்றன. ரசிகர்களின் சிரமத்தை குறைக்க அது பலனாக இருந்தது. ஆனால் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை முதலில் கவுண்டரில் தான் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக போட்டிக்கு குறைந்தது ஒருவாரம் முன்பாவது டிக்கெட் விற்பனை நடைபெறும். ஆனால் போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு டிக்கெட் விற்பனை செய்தது ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வத்தை கிளப்பியது.
விற்பனைக்கு தாமதம்
டிக்கெட் பெற விரும்புவர்கள் காலை முதலே பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து நள்ளிரவு முதலே ரசிகர்கள் படையெடுத்தனர். கூட்டம் ஒருபுறம் கூடிய போதும், அதிகாலை டிக்கெட் கொடுக்க தொடங்கியிருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. ஆனால் டிக்கெட் விற்பனையை தொடங்க பெரும் தாமதம் செய்துள்ளனர். இதனால் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வந்துள்ளன.
கொந்தளிக்கும் மக்கள்
ஒருகட்டத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாத போலீசார் தடியடி நடத்த, அது பெரும் கலவரமாக மாறியுள்ளது. ஆஃப்லைனில் டிக்கெட் விற்றது, தாமதமாக டிக்கெட் விற்பனை செய்தது, 2 நாட்கள் முன்னதாக விற்பனை என அறிவித்தது என ஐதராபாத் கிரிக்கெட் வாரியம் தான் அடுத்தடுத்த தவறுகளை செய்துள்ளதாக ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.