3வது ஒருநாள் ஆட்டம்
ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியை தொடங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டனர். இவர்கள் முதல் விக்கெட்டிற்கு மட்டும் 212 ரன்களை விளாசினர். நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அமைக்கப்பட்ட அதிக பார்ட்னர்ஷிப் இதுதான் ஆகும். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 112 ரன்களும், ரோகித் சர்மா 101 ரன்களும் குவித்தார்கள்.
ரோகித் சர்மா சதம்
இந்நிலையில் சுப்மன் கில்லின் சதத்தை விட ரோகித்தின் சதம் தான் இன்று ஸ்பெஷல் ஆகும். ஏனென்றால் 50 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்து வந்த ரோகித் சர்மா 1101 நாட்களுக்கு பிறகு இன்று தான் சதம் அடித்தார். கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் தான் அடித்திருந்தார்.
தகர்ந்த சாதனை
இதன் மூலம் பிரமாண்ட சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கிப் பாண்டிங்-ன் 3வது இடத்தை சமன் செய்துள்ளார். பாண்டிங் 365 இன்னிங்ஸ்களில் 30 சதங்களை அடித்திருந்தார். ரோகித் சர்மா 234 இன்னிங்ஸ்களில் 30 சதங்களை அடித்துவிட்டார். இந்த பட்டியலில் இந்தியாவின் ஜாம்பவான் 49 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் விராட் கோலி 46 சதங்களுடன் உள்ளார்.
அதிக சிக்ஸர்
இதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு ரோகித் முன்னேறியுள்ளார். பாகிஸ்தானின் சாஹீத் அஃப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், கிறிஸ் கெயில் 331 சிக்ஸர்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மா 271 சிக்ஸர்களுடன் 3வது இடத்தை பிடித்துள்ளார்.