இந்தியா வெற்றி
இந்தியா - இலங்கை இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆதிக்கம்
இந்தப் போட்டியில், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களை சமாளிக்க முடியாத இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சுழற்பந்துவீச்சாளர்கள் எப்படி?
சுழற்பந்துவீச்சாளர்கள் வாஷிங்க்டன் சுந்தர் 1 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆனால், அவர்கள் ஓவர்களில் இலங்கை வீரர்கள் மிக எளிதாக ரன் குவித்தனர்.
பும்ரா சிறிய ஏமாற்றம்
அதே சமயம், வேகப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் தட்டுத் தடுமாறித் தான் ரன் எடுக்க முடிந்தது. பும்ரா தான் வீசிய கடைசி ஓவரில் தான் மூன்று பவுண்டரி கொடுத்து ஏமாற்றினார். மற்றபடி, இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் கையில் தான் போட்டி இருந்தது.
விக்கெட் வேட்டை
பும்ரா 1, ஷர்துல் தாக்குர் 3, நவ்தீப் சைனி 2 விக்கெட் வீழ்த்தினர். அதிலும், ஷர்துல் தாக்குர் இலங்கை அணியின் மூன்று லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தி மிரட்டினார்.
சைனி அசத்தல்
நவ்தீப் சைனி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இப்படி பும்ரா லேசாக தடுமாறினாலும், இளம் பந்துவீச்சாளர்கள் அசத்தலாக ஆடியதை பாராட்டி பேசினார் கேப்டன் கோலி.
துல்லியமான செயல்பாடு
கேப்டன் கோலி போட்டி முடிந்த பின் பேசுகையில், "இது ஒரு துல்லியமான செயல்பாடு. ஒவ்வொரு தொடரிலும் நாங்கள் அப்படித்தான் முன்னேற விரும்புகிறோம். இந்த நேரத்தில் இன்னும் சில விஷயங்களை நாங்கள் செய்துள்ளோம். நவ்தீப் சைனி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்" என்றார்.
சைனி சூப்பர்!
மேலும், "சைனி ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார், மேலும் அனுபவம் வாய்ந்த சக பந்துவீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் ஷார்துல் போன்றவர்களுடன், அவர் டி20 களில் சிறப்பாக பந்து வீசுகிறார்" என்றார்.
மூத்த வீரர்
அணியில் ஒரே திறன் கொண்ட பந்துவீச்சாளர்கள் இருந்தால் அவர்களில் மூத்த வீரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறினார் கோலி. பும்ரா அணிக்கு திரும்பிய நிலையில், அவர் இதை கூறி இருக்கிறார்.
அடுத்த போட்டி எப்போது?
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி புனேவில் ஜனவரி 8 அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்.