இலக்கு
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களை எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய அசலங்கா 65 ரன்களும், அவிஷிங்கா 50 ரன்களும், கருணரத்னே 44 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்
276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் திணறினர். முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா 13 ரன்களுக்கும், ஷிகர் தவான் 29 ரன்களுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதன் பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் 1 ரன்னும், மணிஷ் பாண்டே 37 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
அரைசதம் விளாசல்
இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டை போல சரிந்து கொண்டிருக்க, நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 44 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களை விளாசி அவுட்டானார். யாதவின் விக்கெட்டிற்கு பின்னர் இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அபார வெற்றி
ஆனால் அந்த எண்ணத்தை மாற்றி அமைத்தார் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே ரன் குவிக்க முடியாமல் திணறிய சூழலில் தீபக் சாஹர் இலங்கை பந்துவீச்சை அசால்ட்டாக கையாண்டார். சிறப்பாக விளையாடிய அவர் 82 பந்துகளில் 69 ரன்களை குவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில், தான் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அவர் அசத்தினார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த புவனேஷ்வர் குமார் 19 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப்பிடித்தது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சாதனை
இந்த போட்டியை இந்திய அணி வென்றதால், வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே அணிக்கு எதிராக அதிக போட்டிகளை வென்ற அணியாக இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இலங்கை அணிக்கு எதிராக இந்தியா இதுவரை 92 ஒருநாள் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.