பந்துவீச்சாளர் யார்?
இரண்டு முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களும் காயத்தில் இருப்பதால் மூன்றாவது போட்டியில் யாரை மாற்று வேகப் பந்துவீச்சாளராக களமிறக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருநாள் தொடர்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரை 2 - 1 என இந்தியா வென்ற நிலையில், ஒருநாள் தொடரில் இரு போட்டிகள் முடிவில் இந்தியா 1 - 1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டியில் வென்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்ற முடியும்.
புவனேஸ்வர் குமார் காயம்
ஒருநாள் தொடருக்கு முன் வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயம் அடைந்தார். இந்த நிலையில், முகமது ஷமி மற்றும் தீபக் சாஹர் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களாக சிறப்பாக ஆடினர்.
தீபக் சாஹர் பந்துவீச்சு
குறைந்த அனுபவமே கொண்ட தீபக் சாஹர் டி20 போட்டிகளைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளிலும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 48 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். இரண்டாவது போட்டியில் துவக்க ஓவர்களை சிறப்பாக வீசிய அவர், மத்திய ஓவர்களில் மட்டுமே ரன் கொடுத்தார்.
சாஹர் காயம்
இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே, புவனேஸ்வர் குமார் காயத்தால் பாதிப்படைந்து இருந்த இந்திய அணிக்கு, மேலும் சிக்கல் ஏற்பட்டது.
மாற்று பந்துவீச்சாளர்கள் யார்?
புவனேஸ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்குர், தீபக் சாஹருக்கு பதில் நவ்தீப் சைனி அணியில் மாற்று வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். இரண்டாவது போட்டியில் ஆடிய தாக்குர், பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
தாக்குர், சைனி குழப்பம்
மூன்றாவது ஒருநாள் போட்டியில் தாக்குர் - நவ்தீப் சைனி, இருவரில் யாரை ஆட வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கேப்டன் கோலி நவ்தீப் சைனியை பயன்படுத்தவே அதிக வாய்ப்பு உள்ளது.
மூன்றாவது ஒருநாள் போட்டி சிக்கல்
மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறும் கட்டாக் ஆடுகளம் அதிக ரன்கள் குவிக்க ஒத்துழைக்கும் என்ற கருத்து உள்ளது. இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்கவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், ஷமியுடன் யாரை களமிறக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வெற்றி அவசியம்
மூன்றாவது போட்டியில் வென்றால் மட்டுமே ஒருநாள் தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில், கேப்டன் கோலிக்கு சரியான அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற அழுத்தம் ஏற்பட்டுள்ளது.