லீட்ஸ்: தொடர்ந்து 10வது ஒருதினப் போட்டித் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது. அதே நேரத்தில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து தொடரை வென்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டித் தொடரை 2-1 என இந்தியா வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்த நிலையில் நேற்று 3வது போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து வென்று, தொடரைக் கைப்பற்றியது.
இதன் மூலம் 2016ல் இருந்து தொடர்ந்து 9 ஒருதினப் போட்டித் தொடர்களில் வென்று வந்த இந்தியாவுக்கு 10வது தொடர் வெற்றி கைநழுவிப் போனது.
ஜிம்பாப்வேவை 3-0, நியூசிலாந்தை 3-2, இங்கிலாந்தை 2-1, வெஸ்ட் இண்டீஸை 3-1, இலங்கையை 5-0, ஆஸ்திரேலியாவை 4-1, நியூசிலாந்தை 2-1, இலங்கையை 2-1, தென்னாப்பிரிக்காவை 5-1 என தொடர்ந்து 9 ஒருதினப் போட்டித் தொடர்களில் இந்தியா வென்று வந்தது.
விராட் கோஹ்லி கேப்டனாகப் பொறுப்பேற்றப் பிறகு, இந்தியா சந்திக்கும் முதல் தொடர் தோல்வி இதுவாகும். அதேபோல் இங்கிலாந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக தொடரை வென்றுள்ளது.
2011ல் இங்கிலாந்தில் நடந்த தொடரில் இந்தியாவை 3-0 என இங்கிலாந்து வென்றது. 2011-12ல் இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்தை 5-0 என இந்தியா வென்றது. 2012-13ல் இந்தியாவில் நடந்த தொடரில் இந்தியா 3-2 என வென்றது. 2014ல் இங்கிலாந்து சென்ற இந்தியா 3-1 என வென்றது. 2016-17ல் இந்தியாவில் நடந்த தொடரில் 2-1 என இந்தியா வென்றது.