பாகிஸ்தானை சுருட்டிய புவி, ஜாதவ்.. ரோஹித் அதிரடி.. இந்தியா-பாக். ஹைலைட்ஸ்
துபாய்: ஆசிய கோப்பை பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
126 பந்துகள் மீதமிருக்கையில் இந்திய அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கெதிராக அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கத்து.
இப்போட்டியில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள்
1) புவனேஸ்வர் குமாரின் அதிரடி பந்துவீச்சு
ஹாங்காங் அணிக்கெதிராக எடுபடாத புவனேஸ்வர் குமார் பந்துவீச்சு பாகிஸ்தானை பதம் பார்த்தது. சிறப்பாக பந்துவீசிய அவர் பாகிஸ்தானின் தொடக்க வீரர்களை ஆரம்பத்திலேயே வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அவர் 7 ஓவர்கள் பந்துவீசி 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

2) கேதார் ஜாதவின் காக்கும் கரங்கள்
இந்திய அணியின் ஆல் ரௌண்டர் கேதார் ஜாதவ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னணி ஆல் ரௌண்டர் ஹார்டிக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறிய நிலையில் கேதார் ஜாதவ் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தானை அதிக ரன்கள் குவிக்க விடாமல் செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 162 ரன்களில் ஆட்டமிழந்தது.

3) பாகிஸ்தானின் ஆறுதல் கூட்டணி
பாகிஸ்தான் அணி 3 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் களம் கண்ட பாபர் அசாம் மற்றும் சோயிப் மாலிக் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பாபர் அசாம் 47 ரன்களையும் மாலிக் 43 ரன்களையும் எடுத்தனர். இவர்கள் மூன்றாவது விக்கெட்டிற்கு 82 ரன்களை குவித்தனர்.
4) ரோஹித் சர்மாவின் அதிரடி
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி பொறுமையாக தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. பின்னர் ரோஹித் சர்மா தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அவர் 39 பந்துகளில் 52 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவர் முதல் விக்கெட்டிற்கு தவான் உடன் இணைந்து 82 ரன்களை குவித்தார்.

5) வெற்றிக்கான ரன்னை அடித்த ராயுடு
இந்திய அணி 104 ரன்களுக்கு தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அம்பட்டி ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் மேற்கொண்டு விக்கெட்கள் விழாது விளையாடி அணியை வெற்றி பெறச்செய்தனர். இருவரும் தலா 31 ரன்களை குவித்தனர். 29ஆவது ஓவரில் பவுண்டரி அடித்து ராயுடு அணியை வெற்றி பெறச்செய்தார்.


Click it and Unblock the Notifications