ஏன் வாய்ப்பு?
முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் தவான், சரியாக ரன் குவிக்கவில்லை. எனினும், நான்காம் போட்டியிலும் அவர் வாய்ப்பு பெற்றார். இது குறித்த விவாதத்தில் கௌதம் கம்பீர் கடுமையாக சாடிப் பேசினார்.
கேப்டனுக்கு நெருக்கம்
முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடாத அம்பதி ராயுடு அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தவான் மட்டும் வாய்ப்பு பெறுவதை குறிப்பிட்ட கம்பீர், தவான், கேப்டனுக்கு நெருக்கமாக இருப்பதால் அதிக வாய்ப்பு பெறுகிறார் என்ற பொருள்பட பேசினார்.
கடுமையான விமர்சனம்
மேலும், பேட்டிங்கில் தவானின் தவறுகளை குறிப்பிட்டும் பேசினார் கம்பீர். இப்படி கடுமையான விமர்சனங்களை கம்பீர் முன் வைத்த பின் போட்டி துவங்கியது. தவான், முதல் மூன்று போட்டிகள் போல் அல்லாமல், இந்த போட்டியில் அதிரடி காட்டி ஆடினார்.
ரசிகர்கள் கேலி
கம்பீர் அப்படி பேசி முடித்த சில மணி நேரங்களில் தவான் நேரலையில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தார். இதனால், கௌதம் கம்பீரை கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக கேலி செய்தனர்.
ஏன் இப்படி?
தவான், தன் அதிகபட்ச ஒருநாள் போட்டி ரன்னை கடந்து 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால், கம்பீரின் விமர்சனம், விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஆமாம், கம்பீர் ஏன் தவானை கடுமையாக விமர்சித்தார்?
தவான் உள்ளே, கம்பீர் வெளியே
இந்திய அணியில் தவானின் வரவுக்கு பின்னர் தான் கௌதம் கம்பீர் தன் இடத்தை இழந்தார் என்று சொல்லலாம். அல்லது, கம்பீருக்கு மாற்று வீரரை தேடிக் கொண்டு இருந்த போது சரியான தேர்வாக தவான் அமைந்தார் என்றும் சொல்லலாம்.
இப்படி இருக்குமோ?
ஒரு வேளை அதை மனதில் வைத்துத் தான் கம்பீர் கடுமையாக விமர்சித்திருப்பரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது போல தன் இடத்தை பறித்துக் கொண்ட சக வீரர்களை தாக்கிப் பேசும் வழக்கம் இந்திய கிரிக்கெட் அரங்கில் தோன்றி உள்ளது.
தாக்குதல்
முன்பு அஸ்வினை தாக்கிப் பேசி வந்தார் ஹர்பஜன். டெஸ்ட் அணியில் அஸ்வினை இனி சேர்க்கக் கூடாது என கூறி வந்தார். அதே போல, தற்போது கம்பீர், தவானை தாக்கிப் பேசி உள்ளார்.