அணித் தேர்வில் சறுக்கல்கள்
அணித் தேர்வில் இந்தியாவின் சறுக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் தொடங்கி, இங்கிலாந்திலும், தற்போது ஆஸ்திரேலியாவிலும் இந்திய அணி நிர்வாகம் (கோலி + ரவி சாஸ்திரி) அணித் தேர்வில் பல குழப்பங்களை செய்தது.
19 வீரர்கள் கொண்ட அணி
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு 19 இந்திய வீரர்கள் கொண்ட அணி அழைத்து சென்றது இந்தியா. இத்தனை வீரர்கள் ஒரு டெஸ்ட் தொடருக்கு தேவையா? பொதுவாக ஒரு தொடருக்கு அணி தேர்வு செய்யும் போது 14 முதல் 16 வீரர்கள் வரை மட்டுமே தேர்வு செய்வார்கள்.
16 வீரர்கள் களமிறங்கினர்
ஆனால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீரருக்கும் ஒரு மாற்று வீரர் என்கிற ரீதியில் 19 வீரர்கள் வரை தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 16 வீரர்கள் களமிறங்கி விட்டனர் என்பதும் ஆச்சரியமான விஷயம்.
4 வீரர்களுக்கு காயம்
இந்த தொடரின் இடையே 4 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அஸ்வின், ரோஹித் சர்மா முதல் போட்டியிலும், இஷாந்த் சர்மா மூன்றாவது போட்டியிலும் காயமடைந்தனர். ஜடேஜா முதல் இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அவருக்கு எப்போது காயம் ஏற்பட்டது என்பதே மர்மமாக உள்ளது. இந்தியாவில் இருந்தே காயத்தோடு வந்தார் என ரவி சாஸ்திரி கூறினார். அதை தேர்வாளர் மறுத்தார்.
வீரர்கள் நலனில் அக்கறை?
இப்படி பல்வேறு மாற்றங்கள் காயம் காரணமாக ஏற்பட்ட நிலையில், இந்திய அணி தேர்வுக் குழுவும், அணி நிர்வாகமும் வீரர்கள் நலனில் என்ன அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன் நடந்த அத்தனை தொடர்களிலும் இந்திய வீரர்கள் பலர் காயமடைந்தனர். எந்த அணியிலும் இல்லாத அளவு இந்திய அணியில் கடந்த ஆண்டு அதிக காயங்கள் ஏற்பட்டன.
புவனேஸ்வர் குமாரின் வாய்ப்பு
இந்திய அணியில் ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்களில் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சு முறை ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் எடுபடாது எனக் கூறி அவருக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ஏன் அணியில்?
இரண்டாவது டெஸ்டில் இந்திய நான்கு பந்துவீச்சாளர்களை கொண்டு களமிறங்க முடிவு செய்த போது கூட புவனேஸ்வரை விடுத்தது உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு அளித்தார்கள். அவர் சரியாக பந்துவீசவில்லை. அப்படி என்றால் புவனேஸ்வர் குமாரை ஏன் அணியில் எடுத்தார்கள்? இந்தியாவிலேயே இருந்திருந்தால் அவர் ரஞ்சி தொடரிலாவது பங்கேற்று இருப்பார்.
ஹர்திக் பண்டியா ஏன் வந்தார்?
அதே போல காயத்தில் இருந்த ஹர்திக் பண்டியா அணியில் சேர்த்தே ஆக வேண்டும் என வேக வேகமாக ரஞ்சி தொடரில் ஒரே ஒரு போட்டி ஆடி அதிலேயே அவர் உடற்தகுதி மிக்கவர் என முத்திரை குத்தப்பட்டு கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு முன் ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவரும் எந்த டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க வில்லை.
வரிசை கட்டும் கேள்விகள்
எதற்காக பண்டியாவை வேக வேகமாக அரைகுறையாக தயார் செய்து ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும்? புவனேஸ்வர் முன்னணி பந்துவீச்சாளர் என பேட்டிக்கு பேட்டி பேசும் ரவி சாஸ்திரியும், கோலியும் அவரை ஏன் பயன்படுத்தவில்லை? பார்மில் இல்லாத ராகுலை எதற்காக அணியில் இன்னும் வைத்து இருக்கிறார்கள்? இதற்கெல்லாம் அணி நிர்வாகம் பதில் சொல்ல மாட்டார்கள். ஏன் தெரியுமா?
தற்பெருமை பேசுகிறார்கள்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி 1983 உலகக்கோப்பையை விட பெரிது என்றும், 2011 உலகக்கோப்பை வெற்றியை விட பெரிது என்றும் தற்பெருமை பேசவே அவர்களுக்கு நேரம் போதவில்லை.