விக்கெட் கீப்பராக தேர்வு
இந்திய டெஸ்ட் அணியில் விரிதிமான் சாஹா காயத்தில் இருந்த போது அடுத்த விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்தது. பார்த்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக் ஆகியோரை பயன்படுத்தி பார்த்த பின்னர், ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தனர் கோலி - ரவி சாஸ்திரி.
அடம் பிடிக்கும் பண்ட்
அதற்கேற்ப அவரும் ஒரு சதம், சில அரைசதம் என அடித்து டெஸ்ட் அணியில் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். விக்கெட் கீப்பிங்கிலும் ஓரளவு முன்னேறி வருகிறார். எனினும், தன் டி20 அதிரடியை டெஸ்ட் போட்டியிலும் காட்டுவேன் என அடம்பிடித்து வருகிறார் பண்ட். இது தான் அணிக்கு சிக்கலாக இருக்கிறது.
தூக்கி அடித்து ஆட்டமிழக்கும் பண்ட்
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் கூட ரிஷப் பண்ட் சூழ்நிலை உணர்ந்து ஆடுவதில்லை. களத்தில் இறங்கினால் ஓவருக்கு ஒரு சிக்ஸ் அடிக்க வேண்டும் என தூக்கி அடித்து ஆட்டமிழந்து வருகிறார். குறைந்த ஓவர் போட்டிகளில் தான் அப்படி என பார்த்தால், டெஸ்ட் போட்டியிலும் அதே போல ஆடி விக்கெட்டை பறி கொடுத்து வருகிறார்.
எப்போதும் வேலை செய்யாது
கிர்மானி கூறுகையில், "சிக்ஸ் அடிப்பது எப்போதும் வேலை செய்யாது. எல்லா சமயத்திலும் சிக்ஸ் அடித்து சதம் அடிக்கவோ, அணியை வெற்றி பெற வைக்கவோ முடியாது. அணி நிர்வாகத்தில் யாராவது அவருடன் இதை பேசி புரிய வைக்க வேண்டும். அவரது இந்த அதிரடி குணத்துக்கு கடிவாளம் போட வேண்டும்" என தெரிவித்தார்.
ரிஷப் கற்றுக்கொள்ள வேண்டும்
மேலும், "அவருக்கு நிறைய திறமை உள்ளது. ஆனால், அவர் அதிக தூரம் போக வேண்டும். இந்திய டெஸ்ட் அணியில் அவர் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்றால் அவர் எல்லாவற்றையும் விரைவாக கற்றுக் கொள்ள வேண்டும். அவர் இரண்டு முறை இந்தியாவுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்து இருக்க முடியும். ஆனால், அந்த சந்தர்ப்பங்களில் எப்படி போட்டியை அணுகுவது என தெரியாமல் விட்டு விட்டார்" என குறிப்பிட்டார் கிர்மானி.