ஆட்டம் எப்படி?
மூன்றாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா 443-7 மற்றும் 106-8 ரன்களை இரண்டு இன்னிங்க்ஸ்களில் எடுத்தது. முதல் இன்னிங்க்ஸில் 151 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா, இரண்டாம் இன்னிங்க்ஸில் 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விரைவாக விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது.
டிம் பெய்ன் சீண்டினார்
ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த போது, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டே அவர்களை சீண்டிக் கொண்டே இருந்தார். ஆனால், அது ஒரு எல்லைக்குள் இருந்தது.
தற்காலிக கேப்டன் டிம் பெய்ன்
அதை மனதில் வைத்து இருந்த ரிஷப் பண்ட், பழி தீர்க்க வேண்டி, டிம் பெய்ன் பேட்டிங் செய்யும் போது அவரை கலாய்க்க ஆரம்பித்தார். ஜடேஜா பந்து வீசிய போது, "நமக்கு ஒரு சிறப்பு விருந்தினர் வந்து இருக்கிறார். தற்காலிக கேப்டன் என்ற பெயரை நீ கேட்டு இருக்கிறாயா? ஜடேஜா, உனக்கு இவரை அவுட் ஆக்குவது ரொம்ப ஈஸி" என கூறினார்.
பேசிக் கொண்டே இருப்பார்
அடுத்து, டிம் பெய்ன் இந்திய வீரர்கள் ஆடிய போது பேசிக் கொண்டே இருந்ததை வைத்து சீண்டினார். "இவருக்கு பேச ரொம்ப பிடிக்கும். வெறுமனே பேசிக் கொண்டே இருப்பார். அது மட்டும் தான் செய்வார்" எனக் கூறி டிம் பெய்ன் இந்த தொடரில் சரியாக ரன் அடிக்காததை குறிப்பிட்டார்.
தனி மனித தாக்குதல்
ரிஷப் பண்ட், டிம் பெய்ன் தன்னை கடுமையாக கலாய்த்ததை மனதில் வைத்து இப்படி பேசினாலும், இது தனி மனித தாக்குதலாக மாறி விட்டது தான் பிரச்சனை ஆகி விட்டது. ரிஷப் பண்ட் பேசியது அனைத்தும் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி ஒலிபரப்பானது.
எச்சரிக்கை விடுத்த அம்பயர்
இதையடுத்து, அந்த ஓவரின் முடிவில் கள அம்பயர் ரிஷப் பண்ட் அருகே வந்து பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அனேகமாக அம்பயர் ரிஷப் பண்ட் எல்லை மீறிப் போவதை குறிப்பிட்டு எச்சரிக்கை செய்து இருக்கலாம். டிம் பெய்ன் ரோஹித் மற்றும் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும் போது என்ன பேசினார் தெரியுமா?
ரோஹித்தை எப்படி சீண்டினார்?
டிம் பெய்ன் ரோஹித் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த போது, "ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் இரண்டில் எந்த அணியை ஆதரிக்கலாம் என எனக்கு குழப்பமா இருக்கு. இப்ப ரோஹித் மட்டும் சிக்ஸ் அடிச்சா நான் மும்பை இந்தியன்ஸ் அணியை தான் ஆதரிப்பேன்" எனக் கூறி ரோஹித்தை சிக்ஸ் அடிக்க தூண்டினார்.
ரிஷப்பை சீண்டினார்
ரிஷப் பண்ட் பேட்டிங் செய்த போது, "தோனி மறுபடியும் ஒருநாள் அணியில் வந்துட்டார். நீ ஹர்ரிகேன் (ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 அணி) அணிக்கு ஆடுறியா?" என கலாய்த்தார். ரிஷப் பண்ட்டுக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதை குறிப்பிட்டு இவ்வாறு கலாய்த்தார்.
கலாய்த்தார் டிம் பெய்ன்
டிம் பெய்ன் கொஞ்சம் ஓவராக ரிஷப்பை சீண்டியது இந்த பேச்சில் தான். "ஓய்வு நேரத்தில் என் குழந்தைகளை பாத்துக்கிறியா? நானும், என் மனைவியும் சினிமாவுக்கு போய்ட்டு வருவோம்" என கூறி கலாய்த்தார். இதை மனதில் வைத்தே ரிஷப் டிம்'மை தாக்கி பேசினார் என தெரிகிறது.