விமர்சனம்
4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ஒரே ஒரு மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது ஷர்துல் தாக்கூர் இணைக்கப்படுவார் என தெரிந்தது. ஆனால் கடைசி நேர ட்விஸ்டாக 2 மாற்றங்கள் நடந்தன. இஷாந்த் சர்மாவுடன் சேர்த்து முகமது ஷமியும் உட்காரவைக்கப்பட்டார். ஷமிக்கு மாற்றாக அனுபவ வீரர் உமேஷ் யாதவ் கொண்டு வரப்பட்டார்.
உமேஷின் பதிலடி
இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசி வந்த முகமது ஷமியை நீக்கிவிட்டு உமேஷ் யாதவை ஏன் கொண்டு வந்தீர்கள் என விமர்சனங்கள் எழுந்தன. முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். 2 அனுபவ வீரர்களை நீக்கிவிட்டு தோற்றுவிடுவதற்கு இந்தியா திட்டமிட்டு வருகிறதா? என சரமாரி கேள்விகளை அடுக்கினர். ஆனால் இந்த விமர்சனங்களுக்கு தனது பந்துவீச்சில் தொடக்கத்திலேயே பதிலடி கொடுத்தா உமேஷ் யாதவ்.
ரூட்டின் விக்கெட்
இங்கிலாந்து பந்து நல்ல ஸ்விங்காகி வருவதால், அதில் கூடுதலாக வேகத்தை சேர்த்து ஸ்டம்புகளை நோக்கி இறக்கி வருகிறார் அவர். அவர் வீசும் பெரும்பாலான பந்துகள் 140கிமீ வேகத்தில் சீறுகின்றன. இதனால் முதல் நாள் ஆட்டத்திலேயே இங்கிலாந்து அணியின் தூணாக விளங்க கூடிய ஜோ ரூட் உமேஷின் வேகத்தில் போல்ட் பறக்க வெளியேறினார்.
புதிய மைல்கல்
இதனையடுத்து இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்திலும் சிறிது நேரத்திலேயே டேவிட் மாலன் விக்கெட்டையும் எடுத்து அசத்தினார். இந்நிலையில் இந்த விக்கெட்டுகள் மூலம் புதிய சாதனை ஒன்றை அவர் படைத்துள்ளார். அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்களை எடுத்த 6வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அதிகவேக 150 விக்கெட்கள்
இதுமட்டுமல்லாமல் அதிவேகமாக 150 விக்கெட்களை எடுத்தவர்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார். உமேஷ் யாதவ் 48 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் 39 போட்டிகளில் 150 விக்கெட்களை எடுத்து கபில் தேவ் உள்ளார். ஜவகல் ஸ்ரீநாத் 40 போட்டிகளிலும், முகமது ஷமி 42 போட்டிகளிலும் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.