அசத்தல் வெற்றி
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. சொந்த மண்ணிலேயே படுமோசமான தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து வீரர்கள் மீது அந்நாட்டு ரசிகர்களே கடும் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். பழிவாங்கும் எண்ணத்தினால் இந்தியாவின் டெயில் எண்டர்ஸை கூட இங்கிலாந்தால் சமாளிக்க முடியாமல் போய்விட்டதாக ஜோ ரூட் மீதும் பெரும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்திய அணியை 3வது டெஸ்ட் போட்டியில் எப்படியவது வீழ்த்திவிட வேண்டும் என இங்கிலாந்து முடிவுடன் உள்ளது. இதற்காக முக்கியமான 4 வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவின் ப்ளேயிங் 11
இந்நிலையில் அதனை எதிர்க்கும் வகையில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை பிரித்வி ஷா வாய்ப்புக்காக காத்துள்ளார். முதல் 2 டெஸ்ட் போட்டியிலுமே ஓப்பனிங் வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டதால் பிரித்விக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை. இலங்கையில் இருந்து அவர் ஓப்பனிங்கிற்காக வரவழைக்கப்பட்ட போதும், பெஞ்சில் அமர வேண்டிய சூழலே உள்ளது.
இளம் வீரர்களின் காத்திருப்பு
இதே போல இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட சூர்யகுமார் யாதவும் மீண்டும் பெஞ்சில் அமர வேண்டியுள்ளது. பல போட்டிகளிலும் சொதப்பி வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் 2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி விட்டதால் அவர்களுக்கான வாய்ப்பு இன்னும் உறுதியாக உள்ளது. அவர்கள் இருவரும் 2வது இன்னிங்ஸின் போது இந்திய அணி சறுக்கிய போது இக்கட்டான சூழலில் ரன் குவித்தனர்.
பவுலிங்
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் விக்கெட் எதுவும் எடுக்காமல் பேட்டிங்கில் மட்டுமே ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டார். அவர் விக்கெட் எடுக்காதது 2வது டெஸ்டில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், 3வது டெஸ்டில் பாதிக்கக்கூடும் என்பதால் இந்த போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வினின் பேட்டிங்
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற களமாக இருந்தாலும், அஸ்வின் அசால்ட்டாக பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். அதே போல பேட்டிங்கிலும் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். கடந்த முறை இங்கிலாந்து அணி இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அஸ்வின் சதம் அடித்து அசத்தியிருந்தார். எனவே அனைவரின் கோரிக்கையை ஏற்று 3வது டெஸ்டில் அஸ்வினை களமிறக்க கோலி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடும் போட்டி
இங்கிலாந்து தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீனியர் வீரர் இஷாந்த் ஷர்மா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரின் நெருக்கடியால் தான் விக்கெட்டுகள் சரிந்தன. எனவே அவருக்கு மாற்றாக மீண்டும் ஷர்துல் தாக்கூர் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஷர்துல் தற்போது குணமடைந்து இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை அவர் இன்னும் உடற்தகுதி பெறாவிட்டால், இஷாந்தின் இடத்திற்கு 2வது சுழற்பந்துவீச்சாளராக ரவீந்திர ஜடேஜா களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. இதனால் ஒரு இடத்திற்கு 3 வீரர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
ப்ளேயிங் 11 கணிப்பு
ரோகித் சர்மா, கே.எல்.ராகுல். புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா/ ஜடேஜா/ ஷர்துல் தாக்கூர், பும்ரா, முகமது சிராஜ்