
5வது மற்றும் இறுதி போட்டி
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிவரும் சர்வதேச டி20 தொடரின் 4 போட்டிகளிலும் வெற்றி கொண்டுள்ளது. இதில் 2 போட்டிகளில் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி கண்டு, பார்வையாளர்களுக்கு மைதானத்தில் உற்சாகத்தை வழங்கியது. இந்நிலையில் 5வது மற்றும் இறுதிப் போட்டி மவுண்ட் மாங்கானுய்யில் இன்று இன்னும் சிறிது நேரத்தில் துவங்க உள்ளது.

இந்தியாவின் அபார ஆட்டம்
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சொந்தமண்ணில் விளையாடிய இரண்டு தொடர்களை வெற்றிகரமாக கைகொண்டுள்ள இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு முதலில் சர்வதேச டி20 தொடரில் விளையாடிவரும் இந்தியா தொடர்ந்து சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. டி20 தொடரின் முதல் நான்கு போட்டிகள் ஆக்லாந்து, ஹாமில்டன் மற்றும் வெல்லிங்டனில் நடந்து முடிந்துள்ளது.

இதுவரை நடைபெறாத சாதனை
இந்நிலையில் மவுண்ட் மாங்கானுய் பகுதியில் இன்று நடைபெறவுள்ள 5வது மற்றும் இறுதி டி20 போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன. இதில் வெற்றி கண்டு 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் அனைத்து போட்டிகளில் வெற்றி கொள்ள இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த சாதனை இதுவரை சர்வதேச அளவில் நடைபெறாதது மட்டுமின்றி அந்நிய மண்ணில் இத்தகைய சாதனையை இதுவரை இந்தியாவும் பெற்றதில்லை.

அடுத்தடுத்த போட்டிகளில் சூப்பர் ஓவர்
ஹாமில்டன் மற்றும் வெல்லிங்டனில் நடந்து முடிந்துள்ள 3வது மற்றும் 4வது டி20 போட்டிகளில் அடுத்தடுத்து இரு அணிகளும் தொடரை சமன் செய்து சூப்பர் ஓவரில் விளையாடியது. ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு வரவழைத்த இந்த போட்டிகளில் இந்தியா அபாரமாக விளையாடி போட்டிகளில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

மணிஷ் பாண்டே உறுதி
வெல்லிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த 4வது டி20 போட்டியின் வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இளம் வீரர் மணிஷ் பாண்டே சர்வதேச அளவில் இந்தியா உள்பட எந்த அணியும் எதிரணியை 5க்கு 0 என்ற அளவில் முறியடித்ததில்லை என்று குறிப்பிட்டார். இந்த சாதனையை மேற்கொள்ள இன்று நடைபெறவுள்ள 5வது போட்டியை வெல்ல இந்திய அணி தீவிரம் காட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா சோதனை முயற்சி
5 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்றதன்மூலம் தொடரை கைப்பற்றிய இந்தியா, கடந்த போட்டியில் சோதனை முயற்சியாக ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி ஆகியவர்களுக்கு ஓய்வளித்து இளம் வீரர்கள் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் சாய்னி ஆகியோருக்கு வாய்ப்பளித்தது. இதேபோல இன்று நடைபெறவுள்ள 5வது போட்டியிலும் கே.எல். ராகுலுக்கு பதிலாக ரிஷப் பந்திற்கு வாய்ப்பளிக்கப் படவுள்ளது.

கேன் வில்லியம்சன் இடம்பிடிப்பு
வெல்லிங்டனில் நடைபெற்ற கடந்த 4வது போட்டியில் தோள்பட்டை காயம் காரணமாக பங்கேற்காத நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், தற்போது மவுண்ட் மாங்கானுய்யில் நடைபெறவுள்ள 5வது மற்றும் இறுதிப் போட்டியில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3வது போட்டியில் 95 ரன்களை குவித்த கேன் வில்லியம்சனின் பங்கு இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











