ஏமாற்றங்கள்
கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் தோனி, யுவ்ராஜ் சிங் போன்ற வீரர்களின் வருகையால் வாய்ப்புகள் இன்றி தவித்தார். எனினும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் திறமையை நிரூபித்துள்ளார். அந்த வகையில் இந்தாண்டு ஐபிஎல்-ல் ஆர்சிபி அணிக்காக விளையாடிய அவர் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். மேலும் ஆசியக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியிலும் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினேஷ் கார்த்திக்கின் கருத்து
இந்நிலையில் அவர் கூறியுள்ள கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், நான் எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுவேன், தற்போதுள்ள இந்திய அணி தான் இருப்பதிலேயே சிறந்த அணியாக பார்க்கிறேன். கேப்டன் ரோகித் சர்மாவும், பயிற்சியாளர் டிராவிட்டும், வீரர்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கின்றனர். அவர்களின் வீரர்களின் தரத்தை பார்க்கிறார்களே தவிர்த்து, ஒவ்வொரு போட்டியையும் வைத்து கணக்கிடவில்லை.
வாய்ப்பு தருகின்றனர்
ஒரு வீரர் குறிப்பிட்ட நேரத்தில் சொதப்புகிறார் என்றால், அதில் இருந்து அவர் வெளியில் வருவதற்காக தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்கின்றனர். மாறாக அணியில் இருந்து உடனே நீக்கிவிடவில்லை. சோதனை காலத்திலும் ஒரு வீரருக்கு வாய்ப்புகள் கொடுத்தால் தான் அவர் பெரிய கம்பேக் கொடுக்க முடியும். அந்த வகையில் தற்போது சிறந்த அணி உள்ளது எனக் கூறினார். இதனால் இதற்கு முன் இருந்த தோனி தலைமையிலான அணியை தினேஷ் கார்த்திக் மறைமுகமாக விமர்சிப்பதாக தெரிகிறது.
அழுத்தம்
ஃபினிஷர் பணிகளில் அழுத்தங்கள் உள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதலளித்த தினேஷ் கார்த்திக், சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் போது தான் அழுத்தங்கள் ஏற்படும். எனவே ரசிகர்கள் என்னிடம் இருந்து பெரிதும் எதிர்பார்க்கின்றனர். அதனை செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறினார்.