சிறிய போராட்டம்
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியது. களத்தில் பேட்டிங் செய்து வந்த சேஸ் மற்றும் பால், இணைந்து பாதாளத்தில் சரிந்து இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை மீட்க முடிவு செய்தனர். பால் அதிரடியாக ரன் குவிக்க, சேஸ் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு வரும் வகையில் ஆட, வெஸ்ட் இண்டீஸ் அணி ஓரளவு ரன்கள் எடுத்தது. பால் 49 பந்துகளில் 47 ரன்கள் அடித்து வெளியேறினார். இந்த கூட்டணி 73 ரன்கள் எடுத்தது.
ஃபாலோ ஆன் வாங்கிய வெஸ்ட் இண்டீஸ்
சேஸ் அரைசதம் அடித்து வெளியேற, அடுத்து வந்த பின்வரிசை வீரர்களை அஸ்வின் தன் சுழலால், வெளியே அனுப்பி வைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வெறும் 48 ஓவர்களையே சந்தித்தது அந்த அணி. 468 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபாலோ-ஆன் பெற்றுள்ளது. இந்த போட்டியில் இன்னும் இரண்டரை நாள் ஆட்டம் மீதம் இருப்பதால், போட்டியை டிரா செய்யக் கூட கடினம் தான். இந்தியாவின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகி உள்ளது.
ரிஷப் பண்ட் சொதப்பல்
இந்தியா சார்பில் அஸ்வின் 4, ஷமி 2, உமேஷ் யாதவ் 1, ஜடேஜா 1, குல்தீப் 1 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா ஒரு ரன் அவுட் செய்தார். முன்னதாக பேட்டிங்கிலும் இந்தியா கலக்கி இருந்தது. ப்ரித்வி ஷா, கோலி, ஜடேஜா ஆகியோர் சதமும், புஜாரா, ரிஷப் பண்ட் ஆகியோர் அரைசதமும் அடித்து இருந்தனர். விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட் மீண்டும் சொதப்பினார். சில எளிதான கேட்ச்களை கோட்டை விட்டார் அவர்.
இரண்டாவது இன்னிங்க்ஸ்
ஃபாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தன் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட்டத்தை துவங்கியது. முதல் இன்னிங்க்ஸ் போலவே அந்த அணி மீண்டும் சொதப்பியது. துவக்க வீரர் போவெல் மட்டும் அதிரடியாக ஆடி 83 ரன்கள் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன் யாரும் 20 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. 50.5 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது வெஸ்ட் இண்டீஸ். குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 2, ஜடேஜா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.