டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தாலும், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை இந்தியா இழக்காது என்பது ஆறுதலான விஷயம்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்தியா 2-1 என வென்றது. அடுத்த நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் இங்கிலாந்து 2-1 என வென்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்தியா 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 97 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
இந்தத் தொடரில் 5-0 என இங்கிலாந்து வென்றாலும், இந்தியாவின் புள்ளி 112ஆகக் குறையும். அதனால், தொடர்ந்து முதலிடத்திலேயே இந்தியா இருக்கும்.
தற்போது 112 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது தென்னாப்பிரிக்கா. இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது. தற்போது நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் அல்லது டிரா செய்தாலும், அந்த அணி 110 புள்ளிகளுடன் இருக்கும்.
அதனால், 5-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும் முதலிடத்தில் இந்தியா தொடர்ந்து நீடிக்கும். அதே நேரத்தில், 5வது இடத்தில் உள்ள இங்கிலாந்து தரவரிசையில் முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளது.