அருமையாக துவங்கிய இந்தியா
துவக்கத்திலேயே, இந்திய அணியின் இஷாந்த் சர்மா மற்றும் ஷமி விக்கெட்களை எடுக்கத் துவங்கினர். ஷமி பந்துவீச்சில் ஜென்னிங்க்ஸ் மற்றும் ஜோ ரூட் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.
போப் விக்கெட்
பாண்டியா போப் விக்கெட்டையும், இஷாந்த் அலஸ்டர் குக் விக்கெட்டையும் வீழ்த்த இங்கிலாந்து அணி 89-4 என தடுமாறியது. அடுத்து ஜோஸ் பட்லர் 24 ரன்களுக்கு ஷமி பந்தில் வெளியேற, 131-5 என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து.
ரன் குவித்த வெற்றிக்கூட்டணி
இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோ மற்றும் வோக்ஸ், இந்திய பந்துவீச்சை சிதற விட்டனர். அதிரடியாக ஆடிய இந்த கூட்டணி ரன் குவிப்பில் ஈடுபட, செய்வதறியாது தவித்தார், கேப்டன் விராட் கோஹ்லி. 93 ரன்கள் எடுத்த நிலையில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். இந்த ஜோடி, 189 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு எதிராக ஆறாவது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த சாதனையை புரிந்தது.
தோல்வியை தவிர்க்குமா இந்தியா
அடுத்து சாம் கர்ரன் உடன் ஜோடி சேர்ந்த வோக்ஸ் தன் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்து சாதனை புரிந்தார். 250 ரன்கள் முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து மேலும் 50 ரன்கள் சேர்த்தால் கூட, இந்திய அணியின் தோல்வி உறுதி என கருதப்படுகிறது. கையை மீறி சென்று விட்ட இந்த போட்டியை தக்க வைக்க இந்தியா கடுமையாக போராட வேண்டி இருக்கும் என தெரிகிறது.