நாட்டிங்ஹம் : இந்திய அணி நேற்று நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஊதியத்தை கேரளா வெள்ள பாதிப்பிற்கு நிவராணமாக அளிப்பதாக அறிவித்துள்ளது. எனினும், இந்த தொகை உடனடியாக வழங்கப்படாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் பேசிய கோலி, இந்த வெற்றியை கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
கேப்டன் கோலி நேற்று வெற்றிக்கு பின் பேசுகையில், "ஒரு அணியாக இந்த வெற்றியை கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்பிக்க விரும்புகிறோம்" என கூறினார். அதைத் தொடர்ந்து, இந்திய அணி ஒட்டு மொத்தமாக தங்கள் போட்டி ஊதியத்தை கேரளா வெள்ள நிவாரணத்திற்கு அளிக்க முன்வந்துள்ளது.
தற்போது அணியின் ஒரு போட்டிக்கான சம்பளத்தை வழங்க முடிவு செய்தாலும், உடனடியாக அந்த பணம் கேரளா அரசுக்கு சென்று சேராது என கூறப்படுகிறது.
சமீபத்தில் பிசிசிஐ உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பிசிசிஐ அமைப்பின் புதிய அமைப்பு விதிகளை உருவாக்கி அதை சொசைட்டி பதிவாளரிடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பான பணிகள் முடியும் வரை பிசிசிஐ-க்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே, பிசிசிஐ ஒரு அமைப்பாக எந்த பணத்தையும் தானமாக வழங்க முடியாது. எனினும், வீரர்கள் தங்கள் சொந்த பணத்தை வழங்க எந்த தடையும் இல்லை.
ஒரு டெஸ்ட் போட்டிக்கு களத்தில் ஆடும் பதினோரு இந்திய வீரர்களுக்கு 15 லட்சமும், உத்தேச அணியில் இடம் பிடித்து, களமிறங்காத மற்ற வீரர்களுக்கு அதில் பாதியும் வழங்கப்படும். இதை கணக்கிட்டால் கிட்டத்தட்ட இரண்டு கோடி வரை வரும்.