சானியாவால்தான் நான் சதம் அடித்தேன்.. 5 வருடங்களுக்கு பின் அணிக்குள் வந்த சோயிப் மாலிக் நெகிழ்ச்சி
அபுதாபி: இங்கிலாந்துக்கு எதிராக தற்போது பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை ஆடிவருகிறது. முதல் டெஸ்டில் முதலில் பேட் செய்யும், பாகிஸ்தான் அணியின், சோயிப் மாலிக் சதம் விளாசியுள்ளார்.
மூன்றாவது வரிசையில் களமிறங்கிய மாலிக், நேற்றைய ஆட்ட நேர முடிவில், 124 ரன்களுடன் நாட்-அவுட்டாக களத்தில் நின்றார். இதில் சிறப்பு என்னவென்றால், 2010க்கு பிறகு, சோயிப் மாலிக் ஆடிய முதல் டெஸ்ட் போட்டி இதுதான்.

அக்னி பரிட்சை
நீண்ட இடைவேளைக்கு பிறகு டெஸ்ட் அணியில் ஆல்-ரவுண்டரான மாலிக்கிற்கு வாய்ப்பு கொடுத்தது பாக். வாரியம். இதில் திறமையை நிரூபித்தால்தான், அணியில் தொடர முடியும் என்ற நிலையில், சாதித்துள்ளார் சோயிப் மாலிக்.

சானியாவுக்கு சதம்
இந்த சதத்தை தனது மனைவியும், இந்திய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சாவுக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார் மாலிக். தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்தபோது, இதனை அவர் தெரிவித்தார். தம்பதிகள் இருவரும் விளையாட்டு வீரர்களாக இருப்பதால், ஒருவருக்கொருவர் கஷ்ட, நஷ்டங்களை கலந்து பேச முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்பதிக்குள் போட்டி
சானியா மிர்சா சமீபத்தில் பல டென்னிஸ் கோப்பைகளை வரிசையாக வென்றுவருவதாகவும், அதைப்பார்த்து தனக்கும் உத்வேகம் வந்ததாகவும் கூறியுள்ள மாலிக், கணவன்-மனைவியிடையே இதுபோன்ற ஆரோக்கிய போட்டி இருப்பதில் தவறில்லை என்றார்.

உத்வேகம்
உடல்நலத்தில் பிரச்சினை உள்ள காலகட்டங்களிலும், சானியா மிர்சா உத்வேகத்துடன் டென்னிஸ் ஆடி வெற்றிகளை குவித்து வருவதை பார்த்த தனக்கும், அந்த உத்வேகம் தொற்றிக்கொண்டதாகவும், தனது சிறப்பான கிரிக்கெட் ஆட்டத்திற்கு சானியாதான் காரணம் என்றும் மாலிக் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆடுவோம்ல
டெஸ்ட் அணியில் தன்னை சேர்க்காமல்விட்டிருந்தாலும், பல்வேறு பிறவகை போட்டிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்ததாகவும், அதன் பலனாக, நீண்ட இடைவேளைக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்கியபோதும், சிறப்பாக ஆட முடிந்ததாகவும் சோயிப் மாலிக் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications