முரளி விஜய் - மனன் வோரா
முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களைக் குவித்தது. முரளி விஜய் 42 ரன்களைக் குவிக்க, மனன் வோரா 38 ரன்களை விளாசினார். இருவரும் சேர்ந்து வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
காலி செய்த ஜடேஜா
ஆனால் இவர்களை ஜடேஜா அடுத்தடுத்துக் காலி செய்து வெளியேற்றினார். பின்னர் வந்து சேர்ந்தார் பிராவோ. டேவிட் மில்லர், மேக்ஸ்வெல் ஆகியோரை 12வது ஓவரின்போது 3 பந்துகள் வித்தியாசத்தில் சாய்த்ததில் பஞ்சாப் அணி நிலை குலைந்து போனது.
கை கொடுத்த ஸ்டாய்னிஸ் - சாஹா
இருப்பினும் கடைசி நேரத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், விருத்திமான் சாஹா ஆகியோர் கை கொடுத்து ரன் குவித்தனர். இதனால் பஞ்சாப் அணி நல்ல ஸ்கோரை எட்ட முடிந்தது. இல்லாவிட்டால் அந்த அணியால் 150 ரன்களைக் கூட தாண்டியிருக்க முடியாது.
ஏமாற்றிய மெக்கல்லம்
இதையடுத்து சற்றே கடினமான இலக்குடன் சேஸிங்கைத் தொடங்கிய குஜராத் லயன்ஸுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. மெக்கல்லம் டக் அவுட் ஆகி வெளியேறினார். கேப்டன் சுரேஷ் ரெய்னா 20 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்ந்தார்.
அதிரடியாக ஆடிய பின்ச்
மறுபக்கம் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சற்றே நிலைத்தும், பின்னர் அதிரடிக்கு மாறியும் குஜராத் அணியின் நம்பிக்கையை தக்க வைத்தார். சிறப்பாக ஆடிய அவர் 78 ரன்களைக் குவித்தார். அவரும் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து 65 ரன்களைக் குவித்தார்.
சூப்பர் தினேஷ்
தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 41 ரன்களைக் குவித்தார். பின்ச்சும், தினேஷும் ஆடிய ஆட்டம் பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. இருவரும் இணைந்து பஞ்சாப் பவுலர்களை பதம் பார்த்து விட்டனர்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல்
இடையில் ஜடேஜா , பிராவோ ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்து சிக்கலை ஏற்படுத்தினர். ஆனால் தினேஷ் கார்த்திக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடி அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார்.