பெங்களூர்: ஐபிஎல் டி20 தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூரூ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோஹ்லியும், கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். கோஹ்லி 7 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பெங்களூர் அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்ற கெயில் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து டி.வில்லியர்ஸும், கே.எல்.ராகுலும் இணைந்தனர். டி.வில்லியர்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வாட்சன் 15 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினார்.
பெங்களூர் அணியில் கே.எல்.ராகுல் நிலைத்து நின்று ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரிகளும் 4 சிக்ஸரும் அடங்கும். இதேபோல மற்றொரு இளம் வீரர் சச்சின் பேசி 13 பந்துகளில் 25 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது.
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 1 ரன்னில் அவுட் ஆகினார். இதன் பின்னர் கேப்டன் ரோகித் சர்மாவும், ராயுடும் ஜோடி சேர்ந்தனர். ரோகித் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ரனாவும் 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
சிறப்பாக விளையாடி வந்த ராயுடு 44 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி 4 ஓவிரில் மும்பையின் வெற்றிக்கு 44 ரன்கள் தேவைபட்டது. பொல்லார்டும், பட்லரும் ஆட்டத்தை தனதாக்கிக் கொண்டனர். 17 வது ஓவரில் 1 சிக்ஸர் 2 பவுண்டரிகளை விளாசினார் பொல்லார்டு. பட்லரும் அதிரடி காட்ட, 18.4 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பொல்லார்டு 19 பந்துகளில் 35 ரன்களும், பட்லர் 11 பந்துகளில் 29 ரன்களும் குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியின் கர்னல் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.