பெங்களூர்: ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
ஐபிஎல் லீக் போட்டியின் 30-வது ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
பெங்களூர் அணியில் கிறிஸ் கெய்ல் சேர்க்கப்படிருந்தார். இதனால் ராகுலும், கெய்லும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். மோர்கல் பந்தில் ஒரு சிக்ஸ் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய கெயில் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லியும், ராகுலும் சீரான வேகத்தில் ரன் குவித்தனர். ராகுல் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய டி வில்லியர்ஸ் வாணவேடிக்கைக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்கு ரன்களில் சாவ்லா பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய கோஹ்லி 44 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த போது மோர்கல் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இதனை அடுத்து களமிறங்கிய வாட்சன் (34), சச்சின் பேபி (16) மற்றும் பின்னி (16) ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவித்ததால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் மோர்கல், சாவ்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
பின்னர் களமிறங்கிய கொல்கத்தாவிற்கு உத்தப்பா 1, கிறிஸ் லின் 15, கம்பீர் 37, மணீஷ் பாண்டே 8 ரன்களில் ஆட்டமிழக்க, 10.1 ஓவர்களில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. இந்நிலையில் கடைசி 6 ஓவர்களில் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், யூசுப் பதான் -ஆன்ட்ரே ரஸல் ஜோடி இணைந்து பெங்களூர் பெளலர்களை பந்தாடியது.
18-ஆவது ஓவரில் ரஸல் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் விளாசினார். இதையடுத்து சூர்யகுமார் களமிறங்க, ஷம்ஸி வீசிய 19-ஆவது ஓவரில் பதான் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விளாச, கடைசி ஓவரில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அரவிந்த் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சூர்யகுமார் பவுண்டரியை விளாச, 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்து வெற்றி கண்டது கொல்கத்தா.
யூசுப் பதான் 29 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 ஓவர்களில் 24 ரன்களை மட்டும் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்ததோடு, 39 ரன்கள் குவித்த ரஸல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.