மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் கோலாகல, கலர்புல் நிகழ்ச்சிகளுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் இன்று துவங்கியது. மொத்தம் 8 அணிகள், 51 நாட்களில், 60 போட்டிகளில் விளையாட உள்ளன.
ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும் எதிரணியுடன் இரண்டு முறை மோதும். ஒரு போட்டி சொந்த மண்ணிலும் மற்றொன்று எதிரணியின் சொந்த மண்ணிலும் நடக்க உள்ளது.
மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு துவங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் திரும்புவதால், இந்த சீசன் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
போட்டிக்கு முன்பாக இன்று மாலை மிகவும் பிரம்மாண்டமான துவக்க விழா மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்றது. மாலை 6.15 மணி முதல் 7.15 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பிரபல பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், நடன புயல் பிரபு தேவா மற்றும் நடிகைகள் தமன்னா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
துவக்க விழாவில் நடனப் புயல் பிரபுதேவா அசத்தல் நடனமாடினார். ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி பாடலுக்கான நடனத்துடன் தனது நிகழ்ச்சியை துவக்கினார் பிரபுதேவா. அவருடைய நடனத்துக்கு ரசிகர்கள் கொடுத்த கரகோசத்தால் வாங்கடே மைதானம் குலுங்கியது ஸ்கெட்ச் படத்தில் இடம் பெற்ற பாடலுக்கும் பிரவுதேவா நடனமாடினார்
பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்ற ரதத்தில் தமன்னா மைதானத்திற்குள் என்ட்ரி ஆனபோது அரங்கம் அதிர்ந்தது. இதேபோல ஜாக்குலின் பெர்ணாண்டசும் கலக்கலாக கவர்ச்சியோடு நடனமாடினார். ஹிருதிக் ரோஷன் தனது வழக்கமான ஸ்டைலுடன் ஆட்டம்போட்டார்.
மைதானத்துக்கு வந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, "இங்கு குவிந்துள்ள ரசிகர்களின் ஆதரவுடன் மூன்று முறை கோப்பையை வென்றோம். இந்த முறையும் கோப்பையை வெல்ல முயற்சிப்போம்" என்றார்.
வழக்கமாக துவக்க விழாவில், அனைத்து அணிகளின் கேப்டன்களும் பங்கேற்பார்கள். ஆனால், நாளை போட்டிகள் உள்ளதால் இந்த முறை கேப்டன்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அடுத்த இரண்டு மாதங்களுக்கு கோடையை மிஞ்சும் அனல் பறக்கும் போட்டிகளுக்கு தயாராக இருங்க.