ஏன்பா ரஸ்ஸல்! உங்க டீமை பற்றி நீங்களே பப்ளிக்கா போட்டுத் தாக்கலாமா? எகிறிய ஷான் பொல்லாக்!!
கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்து, கடைசியாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று ஆசுவாசம் அடைந்துள்ளது.
ஆனால், மும்பை போட்டிக்கு முந்தைய நாள் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தன் அணியை பற்றி நாசூக்காக புகார்கள் வாசித்தார்.

கேப்டன் செய்த தவறுகள்
கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் அணி நிர்வாகம் செய்த தவறுகள் தான் தோல்விகளுக்கு காரணம் என பெயர் சொல்லாமல் சொல்லி, அதிர வைத்தார். தவறான முடிவுகளால் தான் அணி தோற்று வருகிறது, பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை என வரிசையாக புகார் சொன்னார்.

ரொம்ப சீரியஸ்
மேலும், தோல்விகளாலும், வெளியில் நடக்கும் விஷயங்கள் ஒன்றும் சரியாக இல்லை என்பதாலும், இரண்டு நாட்களாக தான் அறையை விட்டு வெளியே வரவில்லை எனக் கூறி இந்த விஷயம் "ரொம்ப சீரியஸ்" என சுட்டிக் காட்டினார்.

சலசலப்பு
ரஸ்ஸல் இப்படி பேசியது ஐபிஎல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் பேசுகையில், ரஸ்ஸல் இப்படி பொதுவெளியில் அணியை பற்றி புகார் வாசிப்பதால் எந்த பயனும் இல்லை என சொல்லி அவரை சாடினார்.

கவனம் தேவை
"நீங்கள் ஏதேனும் கருத்து சொல்லும் முன் கவனமாக இருக்க வேண்டும். பத்திரிக்கையாளர் சந்திப்புக்குப் போய் எங்கள் அணியில் நல்ல சூழ்நிலை இல்லை, எல்லாம் தவறாக இருக்கிறது, வெளியே நடக்கும் விஷயங்கள் சரியில்லை, நான் அறைக்குள்ளேயே இருக்கிறேன் என சொல்வதால் எந்த பயனும் இல்லை" என விமர்சித்தார் பொல்லாக்.

நியாயம் என்ன?
மேலும், "இது போல பேசுவது அணிக்கு எந்த வகையில் பலனளிக்கும்? உங்களுக்கு ஏதாவது புகார் இருந்தால், அதை அணி மேலாளரிடம் சென்று கூற வேண்டும்" என நியாயத்தை சொன்னார் பொல்லாக்.

சர்ச்சை அடங்கியது
எப்படியோ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி எந்த சலசலப்பையும் வெளிப்படுத்தாமல் ஆடி வெற்றி பெற்றது. அதனால், ரஸ்ஸல் கிளப்பிய சர்ச்சையை பலரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications