தோனியின் கடைசி போட்டி
தோனி 2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக கடைசி வரை போராடினார். எனினும், இந்தியா தோல்வி அடைந்தது. அது தான் தோனியின் கடைசி சர்வதேச போட்டி. அதன் பின் இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை.
நீண்ட விலகலா? ஓய்வா?
முதலில் தோனி இரு மாதங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அதன் பின்னும் தோனியை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை. தோனி நீண்ட காலமாக தாமாகவே விலகி இருக்கிறாரா? அல்லது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டு அறிவிக்காமல் இருக்கிறாரா? என்ற குழப்பம் நீடித்து வந்தது.
ஐபிஎல்
இதன் இடையே 2020 ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால் அவர் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி முதல் பலரும் கூறினர். தோனியும் ஐபிஎல் தொடருக்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
தோனி தயார்
எனினும், இடையே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் தொடர் தள்ளிப் போனது. எப்படி இருந்தாலும் தோனி 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆட தயார் நிலையில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.
மீண்டும் அணியில் தோனி?
தற்போது ஐபிஎல் தொடர் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தோனி ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி தன் பார்மை நிரூபித்து மீண்டும் அணியில் இடம் பெறுவார் என பலரும் கூறி வருகின்றனர்.
ஐபிஎல் ஒன்றும் செய்யப் போவதில்லை
முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா இது பற்றி கூறுகையில், தோனியின் சர்வதேச கிரிக்கெட் கேரியரைப் பொறுத்தவரை, அதில் ஐபிஎல் மூலம் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. தேர்வுக்குழு, கேப்டன், பயிற்சியாளர் எல்லோருக்கும் தோனி முக்கியமானவர். அவர் ஆடத் தயாராக இருந்தால் அவர் அணியில் இருப்பார் என்றார்.
நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை
மேலும், எனக்குத் தெரிந்தவரை தோனி இந்திய அணிக்காக தன் கடைசி போட்டியில் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடி விட்டார். அவர் நிரூபிக்க ஒன்றுமே இல்லை. அவர் ஓய்வை அறிவிக்காமல் இருப்பதால் நாம் என்ன வேண்டுமானாலும் கூறலாம். அது குறித்து அவர் அறிவிக்கும் போது தான் அவர் மனதில் என்ன உள்ளது என்பது தெரிய வரும் என்றார் நெஹ்ரா.
பார்மில் இருக்கும் தோனி
என்னைப் பொறுத்தவரை தோனியின் பார்ம் கீழே விழவில்லை. அவர் தன் கடைசிப் போட்டியில் ஆடிய போது கூட அவர் ரன் அவுட் ஆகும் வரை இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவர் அனைவரின் கடைசி நம்பிக்கையாக இருந்தார் என்றார் நெஹ்ரா.
ஐபிஎல்-ஐ வைத்து தேர்வு நடக்காது
ஒரு வீரராக தோனியின் அளவுகோலை, அடைந்துள்ள இடத்தை ஐபிஎல் எந்த வகையிலும் மாற்ற முடியாது. ஐபிஎல் போன்ற ஒரு தொடர் தோனியை தேர்வு செய்யும் ஒரு அளவுகோலாக அமையாது. அது பேசுவதற்கு ஒரு விஷயம் மட்டுமே என்று அதிரடியாக கூறினார் நெஹ்ரா.