ஷாரூக் கான் முடிவு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாரூக் கான் தான் இந்த முடிவை எடுத்து அறிவித்துள்ளார். மெகா ஏலத்தை ரத்து செய்ய அவர் கூறிய காரணத்தை மற்ற அணிகளும் ஒப்புக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.
மெகா ஏலம்
2020 ஐபிஎல் தொடருக்கான ஏலம் 2019 டிசம்பர் மாதம் நடந்தது. அது சாதாரண ஏலம் தான். ஐபிஎல் அணிகள் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மட்டுமே அந்த ஏலம். அப்போதே மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடக்க உள்ள மெகா ஏலம் பற்றிய எதிர்பார்ப்பு கிளம்பியது.
மெகா ஏலத்தில் என்ன நடக்கும்?
2018 ஐபிஎல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடந்தது. அடுத்து 2021 ஐபிஎல்-லுக்கு முன் மெகா ஏலம் நடக்க இருந்தது. அப்போது அனைத்து அணிகளும் அனைத்து வீரர்களையும் நீக்கி விட்டு அணியை புதிதாக கட்டமைக்க வேண்டும். சில முக்கிய வீரர்கள் மட்டும் தக்க வைத்துக் கொள்ளலாம்.
பணம் மற்றும் நேரம்
அந்த மெகா ஏலத்துக்கு தயாராக ஐபிஎல் அணிகளுக்கு சுமார் நான்கு - ஐந்து மாத காலம் ஆகும். மேலும், ஏலத்தில் வீரர்களை வாங்க 85 கோடி ரூபாய் அளவுக்கு நிதியை ஒதுக்க வேண்டும். மேலும், இந்திய - வெளிநாட்டு வீரர்களை குறித்து ஆலோசனை செய்து தேர்வு செய்வதற்கும் அதிக காலம் ஆகும்.
டிசம்பரில் ஏலம்?
அதற்கான நேரம் இப்போது இல்லை. வழக்கமாக ஐபிஎல் ஏலம் டிசம்பர் மாதத்தில் தான் நடைபெறும். 2020 ஐபிஎல் தொடர் நவம்பர் 10 அன்று தான் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், ஒரு மாத இடைவெளியில் மெகா ஏலம் நடத்த வாய்ப்பே இல்லை.
மற்ற அணிகள் ஒப்புதல்
இது குறித்து சமீபத்தில் நடந்த ஐபிஎல் அணிகள் சந்திப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக் கான் மெகா ஏலம் நடத்த போதிய நேரம் இல்லை என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார். அதை மற்ற அணிகளும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதே அணி
மெகா ஏலம் நடக்காத பட்சத்தில் 2021 ஐபிஎல் தொடரில் தற்போது உள்ள அணியையே தொடரவும் ஐபிஎல் அணிகள் முடிவு செய்துள்ளன. காயம் காரணமாக வெளியேறும் வீரர்களுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்தாலே போதுமானது. ஏலத்துக்கு அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளன அணிகள்.
பிசிசிஐ கூட்டம்
ஐபிஎல் அணிகளின் இந்த முடிவுக்கு பிசிசிஐ சம்மதம் தெரிவிக்கும் என்றே தெரிகிறது. அடுத்து நடக்க உள்ள பிசிசிஐ கூட்டத்தில் அடுத்த ஓராண்டுக்கான செயல் திட்டம் குறித்து பிசிசிஐ முடிவு செய்ய உள்ளது. அப்போது ஐபிஎல் மெகா ஏலத்தை தள்ளி வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
கிரிக்கெட் தொடர்கள்
2021 ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறுவதிலும் சிக்கல் உள்ளது. இந்த ஆண்டு நடக்க இருந்த இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட பல்வேறு தொடர்கள் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2021 ஐபிஎல்
அதனால், ஐபிஎல் நடத்த போதிய தேதிகள் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் தொடருக்காக மற்ற கிரிக்கெட் தொடர்களை மாற்றி அமைக்க வேண்டிய நிலையும் ஏற்படக் கூடும். இது குறித்தும் பிசிசிஐ முடிவு செய்ய வேண்டும்.