2020 ஐபிஎல் தொடர்
2௦20 ஐபிஎல் தொடர் மார்ச் 29 முதல் துவங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனி விருந்து தான் என நினைத்த வேளையில், கொரோனா வைரஸ் பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் ஒரு லட்சம் பேரை பாதித்துள்ளது. தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. பல ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் மட்டும் 90,000 பேருக்கு அந்த வைரஸ் பாதித்துள்ளது. உலகம் முழுவதும் விளையாட்டுத் தொடர்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி எடுத்த முடிவு
இத்தாலியில் 443 பேர் வரை பலி ஆகி இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த நாட்டில் மக்கள் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கால்பந்து வெறியர்கள் கொண்ட அந்த நாட்டில் கால்பந்து போட்டிகளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் பரிதாப நிலை
அதே போல, ஜப்பானில் நடக்க உள்ள 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இல்லாமல் நடக்க உள்ளது. இந்த நிலையில், தான் ஐபிஎல் தொடர்பான சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. முதலில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியான நிலையில், தற்போது 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் அதிக பாதிப்பு இருக்கும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ அமைதி
இந்த சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகளை எப்படி நடத்தப் போகிறது பிசிசிஐ? என்ற கேள்வி எழுந்தது. எந்த சிக்கலும் இல்லாமல் ஐபிஎல் தொடர் நடக்கும் என கங்குலி நம்பிக்கை அளித்தாலும், நிலைமை தினமும் மோசமாகிக் கொண்டே செல்கிறது என்பது தான் உண்மை.
ஐபிஎல் அணிகள் கவலை
எட்டு ஐபிஎல் அணிகளும் கொரோனா பாதிப்பு குறித்து அச்சத்தில் உள்ளன. போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் போனாலும், நேரலையில் மட்டுமாவது போட்டிகளை ஒளிபரப்ப வேண்டும் என கூறி வருகின்றனர்.
முதல் எதிர்ப்பு
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என முதல் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் அந்த மாநில மருத்துவத் துறை அமைச்சர்.
மூடப்பட்ட மைதானம்
அவர் போட்டிகளை ரத்து செய்யுங்கள் அல்லது தள்ளி வையுங்கள் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறினார். இது ஐபிஎல் தொடருக்கு ஏற்பட்ட பெரிய பாதிப்பாக பார்க்கப்படுகிறது. மூடப்பட்ட மைதானத்திலும் கூட போட்டி நடக்க வாய்ப்பு இல்லையோ? என்று தோன்றுகிறது.