மும்பை, கொல்கத்தா நிலை
முதலில் அபுதாபியில் 7 நாட்கள் மட்டுமே குவாரன்டைன் என பிசிசிஐ கூறி உள்ளது. அதை நம்பி மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அங்கே தங்கி குவாரன்டைன் மற்றும் பயிற்சிகளை செய்ய திட்டமிட்டன. ஆனால், தற்போது அந்த இரண்டு அணிகளும் சிக்கலில் உள்ளன.
வெளிநாட்டில் ஐபிஎல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் 2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஐபிஎல் அணி குழுவுடன் அங்கே சென்றுள்ளனர்.
முதற்கட்ட திட்டம்
ஐபிஎல் அணி வீரர்கள் அனைவரும் முதல் வாரம் முழுவதும் அனைவரும் குவாரன்டைன் செய்து வைக்கப்படுவர். அடுத்த மூன்று வாரங்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று ஐபிஎல் தொடருக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள். இதுதான் முதற்கட்ட திட்டம்.
துபாயில் சிக்கல் இல்லை
எட்டு ஐபிஎல் அணிகளில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தவிர்த்து மற்ற ஆறு அணிகளும் துபாயில் தங்கி உள்ளன. அந்த அணிகள் துபாயின் விதிப்படி ஏழு நாள் குவாரன்டைனில் உள்ளனர். விரைவில் பயிற்சியை துவக்க உள்ளனர்.
அபுதாபியில் மட்டும் 14 நாட்கள்
ஆனால், தற்போது அபுதாபியில் மட்டும் 14 நாட்கள் குவாரன்டைன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால், மற்ற அணிகளைக் காட்டிலும் மும்பை, கொல்கத்தா அணிகள் பயிற்சி மற்றும் தயார் நிலையில் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிசிசிஐ குழப்பம்
பிசிசிஐ முதலில் துபாய், அபுதாபி இரண்டு இடங்களிலும் 7 நாள் குவாரன்டைன் என்று தான் நினைத்துள்ளது. ஆனால், தற்போது அபுதாபியில் கடும் விதிமுறைகள் அமலில் உள்ளதை கண்டு குழப்பத்தில் உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா அணிகளும் சிக்கிக் கொண்டுள்ளன. இரண்டு அணி வீரர்களும் இன்னும் ஏழு நாட்களுக்கு ஹோட்டல் அறையை விட்டு வெளியே வர முடியாது.
மும்பை அதிருப்தி
அதிலும் எப்போதும் தெளிவாக திட்டமிட்டு ஐபிஎல் தொடருக்கு காய் நகர்த்தும் மும்பை இந்தியன்ஸ் அணி பிசிசிஐ செய்த சொதப்பலால் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியாவது பிசிசிஐ தலையிட்டு தங்கள் அணி பயிற்சி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த அணியின் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.